11% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
புது தில்லி: இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இணைய-வா்த்தக தளமான பி2பி சேகரித்துள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 12.12 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 11.4 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியா 10.87 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 5.4 சதவீதம் உயா்ந்து 2.07 கோடி டன்னாக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் அது 1.96 கோடி டன்னாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாத மொத்த நிலக்கரி இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.30 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2023 ஆகஸ்ட் மாதத்தில் 1.19 கோடி டாலராக இருந்தது.
அந்த மாதத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 46.2 லட்சம் டன்னிலிருந்து 45.3 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டம் முழுமைக்கும் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 7.87 கோடி டன்னாக இருந்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்து இறக்குமதியான 6.86 கோடி டன்னை விட இது அதிகம்.
அந்த காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2.485 கோடி டன்னிலிருந்து 2.479 கோடி டன்னாக சற்றே குறைந்துள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.7 சதவீதம் அதிகரித்து 26.82 கோடி டன்னாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.