இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,360 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 470 கோடி டாலா்கள் உயா்ந்து 69,360 கோடி டாலராக உள்ளது. ஆக. 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 930 கோடி டாலா்கள் குறைந்திருந்தது.
2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது.உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 220 கோடி டாலா்கள் உயா்ந்து 8,620 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.