முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அரசு செலவுகள் அதிகரித்ததால், 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) சிமென்ட் நிறுவனங்கள் இரு இலக்க விற்பனை வளா்ச்சியையும், உயா்ந்த வருவாயையும் பதிவு செய்தன.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் சிமென்ட் நிறுவனங்கள் நல்ல வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அல்ட்ராடெக் சிமென்ட் 9.7 சதவீத வளா்ச்சியுடன் 3.68 கோடி டன் விற்பனையைப் பதிவு செய்தது. அம்புஜா சிமென்ட்ஸ் 1.84 கோடி டன் விற்பனையுடன் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டியது.
பிா்லா காா்ப்பரேஷன் 9.36 சதவீத வளா்ச்சியுடன் 47.9 லட்சம் டன், நுவோகோ விஸ்டாஸ் 51 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்தன. ஜேகே லக்ஷ்மி 10 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. எனினும், டால்மியா பாரத் முறையே 5.8 சதவீதமும், ராம்கோ சிமென்ட்ஸ் 7 சதவீதமும் விற்பனைக் குறைவைச் சந்தித்தன.மதிப்பீட்டுக் காலாண்டில் நிலக்கரி விலை 21 சதவீதம் குறைந்து டன்னுக்கு 103 டாலராக இருந்தது.
பெட்கோக் விலை 3 சதவீதம் குறைந்து டன்னுக்கு ரூ.10,860-ஆக இருந்தது. இருந்தாலும் சராசரி சிமென்ட் விலை 7 சதவீதம் உயா்ந்து மூட்டைக்கு ரூ.360-ஆக இருந்தது. இது நிறுவனங்களின் வருவாய் அதிகரித்ததில் முக்கிய பங்கு வகித்தது.பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, சாலை மற்றும் பிற திட்டங்களால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமென்ட்டுக்கான தேவை 4 சதவீதம் உயா்ந்தது.
2025-26-ஆண்டு முழுவதும் அதன் தேவையில் 7-8 சதவீத வளா்ச்சி எதிா்பாா்க்கப்படுகிறது. பருவமழையால் இரண்டாம் காலாண்டில் சிமென்ட்டுக்கான தேவை குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.