மும்பை / புது தில்லி: தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ, உலோகப் பங்குகளில் வலுவான வாங்குதல் மற்றும் அந்நிய முதலீட்டு வரவு, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் மேலும் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கையால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 638.12 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்ந்து 85,567.48-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 671.97 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்ந்து 85,601.33 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், ட்ரென்ட் 3.56 சதவீதம் உயர்ந்து முதலிடம் பெற்றது. இன்ஃபோசிஸ் 3.06 சதவீதம், டெக் மஹிந்திரா 2.09 சதவீதம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 1.67 சதவீதம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.28 சதவீதம் உயர்ந்தன. பார்தி ஏர்டெல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், மாருதி ஆகியவையும் உயர்வைக் கண்டன. பாரத ஸ்டேட் வங்கி 0.6 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை அடைந்தது. கோட்டக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ, டைட்டன் ஆகியவையும் சரிவைக் கண்டன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,830.89 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.5,722.89 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்கு வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 206 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்ந்து 26,172.40-இல் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.