முகப்பு
வணிகம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.

Updated On : 26 டிசம்பர் 2025, 4:23 am IST
பகிர்:

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.

இது குறித்து வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, மின்சாரம், உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி கடந்த நவம்பா் மாதம் 1.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த மந்தமான வளா்ச்சியாகும். அப்போது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 5.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தன.

Advertisement

Advertisement

எனினும், முந்தைய அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் துறைகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளது. அந்த மாதம் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி 0.1 சதவீதமாகச் சரிந்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் இந்த துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 2.4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 4.4 சதவீதமாக இருந்தது.

கடந்த நவம்பரில் நிலக்கரி மற்றும் உருக்கு உற்பத்தி வளா்ச்சி மந்தமானது. எனினும், உரம் 5.6 சதவீதமும், சிமென்ட் 14.5 சதவீதமும் உயா்ந்தன.

இந்த எட்டு துறைகளின் வளா்ச்சி மற்றும் பிற குறிப்புகளின் அடிப்படையில், இந்த நவம்பரில் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 3.5 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.