தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!
சென்செக்ஸ் 147.79 புள்ளிகள் உயர்ந்து 75,449.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 73.30 புள்ளிகள் உயர்ந்து 22,907.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: இந்திய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்து முடிந்தது. நிஃப்டி 22,900 க்கு மேல் நிலைபெற்ற நிலையில், முதலீட்டாளர்கள், ஐடி மற்றும் எஃப்எம்சிஜி தவிர்த்து மற்ற துறை பங்குகளை வாங்கி குவித்தனர். இதற்கிடையில், இன்று இரவு வெளியாகும் பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்துள்ளனர்.
கலவையான உலகளாவிய குறிப்புகள் இருந்தபோதிலும், இந்திய குறியீடுகள் தொடக்கத்தில் உயர்ந்து வர்த்தகமான நிலையில், மத்திய நேர இன்ட்ராடே வர்த்தகத்தில், பெரும்பாலான துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் நிஃப்டி 22,950 புள்ளிகளை நெருங்க உதவியது.
நேற்றைய ஏற்றத்தை மேலும் நீட்டிக்கும் விதமாக, காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 172.43 புள்ளிகள் உயர்ந்து 75,473.69 புள்ளிகளும், நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 22,888.30 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையான, சென்செக்ஸ் 147.79 புள்ளிகள் உயர்ந்து 75,449.05 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 73.30 புள்ளிகள் உயர்ந்து 22,907.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
நிஃப்டியில் ஸ்ரீராம் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்த நிலையில் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஐடிசி, இன்ஃபோசிஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
ஐடி மற்றும் எஃப்எம்சிஜி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகள் உயர்ந்து முடிந்தது. நுகர்வோர் சாதனங்கள், மூலதன பொருட்கள், ரியால்டி, எண்ணெய் & எரிவாயு, மீடியா, உலோகம், பவர், பொதுத்துறை வங்கி தலா 1 முதல் 2.8 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
முத்தூட் ஃபைனான்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், சம்பல் பெர்டிலைசர்ஸ், கோரமண்டல் இன்டர்நேஷனல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்வராஜ் என்ஜின்ஸ், வாடிலால் இண்டஸ்ட்ரீஸ், கேம்லின் ஃபைன், தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ், கேப்ரியல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஹோல்டிங்ஸ், ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ், ப்ளூ ஜெட், சாரதா எனர்ஜி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உயர்வை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்த நிலையில் ஷாங்காய் சரிந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.694.57 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கிய நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ .2,534.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 70.35 அமெரிக்க டாலராக முடிந்தது.
இதையும் படிக்க: இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி