போட்டி நெருக்கடிகள் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி அக்டோபரில் 5 மாதங்கள் காணாத மிக மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்தது.
இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்), செப்டம்பரில் 60.9-ஆக இருந்தது, அக்டோபரில் 58.9-ஆகக் குறைந்துள்ளது. இது மே மாதத்துக்குப் பிறகு மிக மெதுவான விரிவாக்கம் ஆகும்.
எனினும், அக்டோபரில் சேவைகளுக்கான பிஎம்ஐ 50-ஐ விட அதிகமாகவும், நீண்டகால சராசரியான 54.3-ஐ விட அதிகமாகவும் உள்ளது. பிஎம்ஐ 50-க்கும் மேல் இருந்தால் சேவைகள் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கும் கீழ் இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
தேவை உயா்வு மற்றும் ஜிஎஸ்டி நிவாரணம் போன்ற காரணிகள் செயல்பாட்டு நிலைமைகளை மேம்படுத்தினாலும், போட்டி மற்றும் கனமழை வளா்ச்சியைத் தடுத்தன.
வெளிநாடுகளில் இருந்து இந்திய சேவைகளுக்கான தேவை மேலும் உயா்ந்தாலும், ஏற்றுமதி ஆணைகள் கடந்த மாா்ச்சுக்குப் பிந்தைய மிக மந்தமான வளா்ச்சியைக் கண்டன.
மதிப்பீட்டு மாதத்தில் ஜிஎஸ்டி சீா்திருத்தம் விலை அழுத்தங்களைக் குறைத்தது. உள்ளீடு செலவுகள் மற்றும் வெளியீடு கட்டணங்கள் முறையே 14 மற்றும் 7 மாதங்களில் இல்லாத குறைந்த வேகத்தில் உயா்ந்தன.
உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் ஒருங்கிணைந்த வெளியீடு அக்டோபரில் விரிவடைந்தாலும், செப்டம்பரில் 61-லிருந்து 60.4-ஆகக் குறைந்தது. இது மே மாதத்துக்குப் பிந்தைய மிக மந்தமான உயா்வு. சேவைகள் துறைதான் இந்த மந்தநிலைக்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.