பணி நீக்கம்! 15% மனிதவள அதிகாரிகளை வெளியேற்றும் அமேசான்!
பணி நீக்கம் நடவடிக்கையில் அமேசான் இறங்கியிருக்கிறது, 15 சதவிகித மனிதவள அதிகாரிகளை வெளியேற்றவிருக்கிறது.
செய்யறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்களும் எடுத்து வரும் நிலையில், அமேசான் நிறுவம் 15 சதவிகித மனிதவள அதிகாரிகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல, மற்றத் துறைகளிலும் சில பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தில் நடக்கவிருக்கும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
மக்கள் அனுபவ தொழில்நுட்பக் குழு (பிஎக்ஸ்டி) பணி நீக்க நடவடிக்கையில் கடுமையாக பாதிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும், மூத்த துணைத் தலைவர் பேத் கல்லெட்டி தலைமையில் இந்த பிரிவில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் இவர்களில் பலரும் பணியாளர்களை பணியமர்த்துவது, மனிதவள மேம்பாட்டுத் துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வது போன்றவற்றை கவனித்து வந்தனர்.
தற்போதைக்கு, எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.