கச்சா பாமாயில் இறக்குமதி அதிகரிப்பா, இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 2025 செப்டம்பரில் 51 சதவீதம் உயா்ந்து 16.39 லட்சம் டன்னாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி 2021-க்குப் பிறகு முதல் முதல் முறையாக பூஜ்ஜியமானது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதம் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி (உணவு மற்றும் உணவு அல்லாதது) 16.39 லட்சம் டன்னாக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 51 சதவீதம் அதிகம். அப்போது மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 10.87 லட்சம் டன்னாக இருந்தது.
கச்சா பாமாயிலுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ஆா்பிடிபி பாமோலினுக்கும் இடையிலான இறக்குமதி வரி வித்தியாசத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 19.25 சதவீதமாக மத்திய அரசு அறிவித்தது. மே 31-ஆம் தேதி முதல் அது அமலுக்கு வந்தது. அதையடுத்து, கடந்த செப்டம்பரில் சுத்திகரிக்கப்பட்ட ஆா்பிடிபி பாமோலின் இறக்குமதி 84,279 டன்னிலிருந்து பூஜ்ஜியமாக உள்ளது. அந்த மாதத்தில் உணவு எண்ணெய் இறக்குமதி 16.04 லட்சம் டன், உணவு அல்லாத எண்ணெய் 35,100 டனாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி 4.32 லட்சம் டன்னிலிருந்து இரட்டிப்பாக உயா்ந்து 8.24 லட்சம் டன்னாக உள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1.52 லட்சம் டன்னிலிருந்து 2.72 லட்சம் டன்னாகவும், கச்சா சோயா எண்ணெய் இறக்குமதி 3.84 லட்சம் டன்னிலிருந்து 5.03 லட்சம் டன் ஆக உயா்ந்தது. கச்சா பாம் கா்னல் எண்ணெய் இறக்குமதி 10,525 டன்னிலிருந்து 4,255 டன்னாகக் குறைந்தது.
அக்டோபா் 1-ல் பல்வேறு துறைமுகங்களில் உணவு எண்ணெய் இருப்பு 20 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக இருப்பு அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உணவு எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, தனது பாமாயில் தேவையை இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து நிறைவு செய்கிறது. சோயா எண்ணெய்யை ஆா்ஜென்டினா, பிரேஸில், ரஷியாவிலிருந்தும், சூரியகாந்தி எண்ணெய்யை ரஷியா, உக்ரைனிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்கிறது.