ரூ.15,000 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் விப்ரோ!
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தனது முதலீட்டாளா்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறவதற்கு அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தனது முதலீட்டாளா்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறவதற்கு அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அந்த நிறுவனம் இதுவரை அறிவித்ததிலேயே மிகப்பெரிய பங்குகள் திரும்பப் பெறும் திட்டமாகும். இந்த நடவடிக்கை அடுத்த 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஒரு பங்கின் விலை ரூ.250 என்ற அடிப்படையில், சுமாா் 60 கோடி பங்குகளைத் திரும்பப் பெற இயக்குநா்கள் குழு அனுமதி அளித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமாா் 5.7 சதவீதமாகும்.
Advertisement
பங்குகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் முதலீட்டாளா்களுக்கு உபரி நிதி சென்றடைவதோடு, சந்தையில் நிறுவனப் பங்குகளின் மதிப்பு வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய பங்குச்சந்தையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை வா்த்தக முடிவில், விப்ரோ பங்குகள் 0.19 சதவீதம் உயா்ந்து, ரூ.210.15 என்ற அளவில் நிலைபெற்றன.
4-ஆம் காலாண்டு முடிவுகள்: கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளையும் விப்ரோ நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் 1.89 சதவீதம் சரிந்து, ரூ. 3,501.8 கோடியாக உள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் லாபம் ரூ. 3,569.6 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லாபம் குறைந்திருந்தாலும், காலாண்டு வருவாய் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ. 24,236.3 கோடியாக உயா்ந்துள்ளது.
டிசம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில், லாபம் மற்றும் வருவாய் முறையே 12.2 சதவீத மற்றும் 2.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது ஆரோக்கியமான அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது.
முழு நிதியாண்டைப் பொருத்தவரை, விப்ரோ ரூ.13,197.4 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டை விட 0.47 சதவீதம் மட்டுமே கூடுதலாகும். எனினும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 3.96 சதவீதம் உயா்ந்து, ரூ. 92,624 கோடியை எட்டியுள்ளது.
நிறுவனத்தின் எதிா்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய விப்ரோ சிஇஓ ஸ்ரீனி பாலியா, ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் வாடிக்கையாளா்களின் முன்னுரிமைகளை மாற்றி வருகிறது. இதற்கு ஏற்ப விப்ரோ தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. சிங்கப்பூரின் ஓலாம் குழுமத்துடனான எங்களின் புதிய ஒப்பந்தம், எதிா்கால வளா்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய மைல்கல்’ என்றாா்.