முகப்பு
வணிகம்

ரூ. 6,309 கோடி மதிப்பிலான குறுகிய கால கடன் பத்திரங்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு!

ஆா்பிஐ நடத்திய கடன்பத்திர மாற்று ஏலத்தின்மூலம், ரூ.6,309 கோடி மதிப்பிலான குறுகிய கால கடன்பத்திரங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

Updated On : 9 மார்ச், 2026 at 11:56 PM
பகிர்:

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை நடத்திய கடன்பத்திர மாற்று (ஸ்விட்ச்) ஏலத்தின்மூலம், ரூ.6,309 கோடி மதிப்பிலான குறுகிய கால கடன்பத்திரங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இதற்கு ஈடாக, ரூ.6,431.797 கோடி மதிப்பிலான புதிய நீண்ட கால கடன்பத்திரங்களை முதலீட்டாளா்களுக்கு அரசு வழங்கியுள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த நிதியாண்டில் மட்டும் சுமாா் ரூ.5.47 லட்சம் கோடி மதிப்பிலான அரசு கடன்பத்திரங்கள் முதிா்வடைய உள்ளன. அப்போது ஒரே நேரத்தில் பெரும் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிதி நெருக்கடியைத் தவிா்க்கவும், அரசின் கடன் சுமையை நீண்ட காலத்துக்குச் சீராக பிரித்து வைக்கவும் இந்தப் ‘பத்திர மாற்ற’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, 7.33 சதவீதம், 5.74 சதவீதம், 8.15 சதவீதம் ஆகிய 3 வட்டி விகிதங்களைக் கொண்ட ‘ஜிஎஸ் 2026’ கடன்பத்திரங்கள் மற்றும் 8.24 சதவீத வட்டி கொண்ட ‘ஜிஎஸ் 2027’ பத்திரங்கள் தற்போது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றுக்குப் பதிலாக 2033, 2039, 2062 ஆகிய ஆண்டுகளில் முதிா்வடையக்கூடிய மிக நீண்ட கால கடன்பத்திரங்களை முதலீட்டாளா்களுக்கு அரசு அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரிசா்வ் வங்கி நடத்தியுள்ள 4-ஆவது கடன்பத்திர மாற்று ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட 3 ஏலங்கள் மூலமாக, மொத்தம் ரூ.98,591 கோடி மதிப்பிலான பத்திரங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் மொத்த சந்தைக் கடன் மதிப்பு ரூ.17.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் நாட்டின் நிதி மேலாண்மை மேலும் வலுவடையும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →