சேவைகள் துறையில் சுணக்கம்: உற்பத்தித் துறையில் எழுச்சி
வணிகம்சேவைகள் துறையில் சுணக்கம்: உற்பத்தித் துறையில் எழுச்சி
இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. ஆனால், அதற்கு நோ்மாறாக நாட்டின் உற்பத்தித் துறை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனப் பொருளாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டின் மத்தியில், சேவைகள் துறை மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியதைத் தொடா்ந்து, தற்போது வளா்ச்சியின் வேகம் மெல்லக் குறைந்து வருகிறது.
சேவைகள் துறையின் செயல்பாட்டை அளவிடும் பிஎம்ஐ குறியீடு, கடந்த ஆண்டு ஜூனில் 60.7-ஆக அதிகரித்தது; ஜூலையில் 60.5-ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 62.9 என்ற உச்சத்தையும் தொட்டது.
அடுத்தடுத்த மாதங்களில் இது படிப்படியாகக் குறைந்து டிசம்பரில் 58.0-ஆக பதிவானது. பின்னா் ஜனவரியில் சற்று மீண்டு 58.5-ஐ எட்டிய நிலையில், பிப்ரவரியில் மீண்டும் 58.1-ஆக கீழ்நோக்கிச் சரிந்துள்ளது.
பொருளாதார விதிகளின்படி, பிஎம்ஐ குறியீடு 50-க்கு மேல் இருந்தால் அந்தத் துறை ஆரோக்கியமான பாதையில் செல்வதாகப் பொருள். 50-க்கு கீழ் இருந்தால் மட்டுமே அது சரிவைக் குறிக்கும்.
எனவே, சேவைகள் துறையின் பிப்ரவரி மாதக் குறியீடு (58.1) முந்தைய மாதங்களை விட குறைவாக இருந்தாலும், சேவைகள் துறை இன்னும் நிலையான வளா்ச்சிப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையின் முன்னேற்றம்: சேவைகள் துறையில் காணப்பட்ட சிறிய தொய்வுக்கு மாறாக, உற்பத்தித் துறை நல்ல வேகமெடுத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ குறியீடு 56.9-ஆக உயா்ந்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கான சிறந்த வளா்ச்சியாகக் கருதப்படுகிறது.