கச்சா எண்ணெய் விலை எதிரொலி: சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகள், நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிவு!
சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகள் சரிந்து 77,566.16 புள்ளிகளாகவும், நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிந்து 24,028.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, மேற்கு ஆசியா கொந்தளிப்பு மற்றும் உலகளாவிய பலவீனமான போக்குகள் உள்ளிட்டவையால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனையை செய்ததால், இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.
இதுதவிர, தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பலவீனம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் மனநிலையை பெரிதும் பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி-யில் இன்று 3,372 பங்குகள் வர்த்தகமான நிலையில் 642 பங்குகள் உயர்ந்தும் 2,631 பங்குகள் சரிந்தும் 99 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
தொடர்ந்து 2வது நாளாக சரிவைப் பதிவு செய்த இந்திய பங்குச் சந்தை, இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 2,494.35 புள்ளிகள் சரிந்து 76,424.55 ஆக இருந்தது. நிஃப்டி 752.65 புள்ளிகள் சரிந்து 23,697.80 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்த முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகள் சரிந்து 77,566.16 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிந்து 24,028.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட் 5.23 சதவீதம் சரிந்தது. அதைத் தொடர்ந்து மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகளும சரிந்தன. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் எச்.சி.எல். டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், ஐஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி சுசுகி ஆகியவை பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் விப்ரோ, சன் பார்மா, அப்பல்லோ மருத்துவமனை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. ஆட்டோ, கேபிடல் குட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு மற்றும் தனியார் வங்கி பங்குகள் சுமார் 2 முதல் 4% வரை சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 5.96 சதவீதமும், ஜப்பானின் நிக்கி-225 குறியீடு 5.20 சதவீதமும் சரிந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும், ஐரோப்பிய சந்தைகளும் சரிந்த நிலையில் அமெரிக்க சந்தை (வெள்ளிக்கிழமை) கடுமையாக சரிந்தன.
பங்குச் சந்தையில், வாரியம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்த பிறகு ஆர் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் பங்குகள் 20% அதிகரிப்பு. ஐடி துறை அறிவிப்பைப் பெற்ற பிறகு மீஷோ பங்கு விலை 10% சரிந்தன. ரூ.80.28 கோடி ஆர்டரைப் கைப்பற்றிய போதிலும் பராஸ் டிஃபென்ஸ் பங்குகள் 4% சரிந்தன. யுபிஎஸ் தரமிறக்கத்திற்குப் பிறகு ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஐஓசி பங்குகள் தலா 4 முதல் 6% சரிந்தன.
ஸ்வான் கார்ப், இன்டர்குளோப் ஏவியேஷன், ஜிஎன்எஃப்சி, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், பிர்லா கார்ப், பிஎல்எஸ் இன்டர்நேஷனல், ஸ்டெர்லிங் வில்சன், ஆர்எச்ஐ மேக்னசிட்டா, ஜஸ்ட் டயல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆர்இசி, ஜேகே லட்சுமி சிமென்ட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ், கெயில், ஐனாக்ஸ் விண்ட் உள்ளிட்ட 850க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்த நிலையை எட்டியது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.6,030.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,971.51 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
கடந்த வாரம், சென்செக்ஸ் 2,368.29 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 728.2 புள்ளிகள் சரிந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 12.34 சதவீதம் உயர்ந்து 104.1 அமெரிக்க டாலராக உள்ளது.