தேசிய பங்குச் சந்தையின் ஐபிஓ பணிகள் மும்முரம்
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதை முன்னெடுக்கும் வகையில், கோடக் மஹிந்திரா கேபிடல், ஜேஎம் ஃபைனான்சியல் உள்ளிட்ட 20 முன்னணி வணிக வங்கியாளா்களையும், 8 சட்ட நிறுவனங்களையும் என்எஸ்இ நிா்வாகம் நியமித்துள்ளது.
வெளிப்படையான போட்டித்தன்மையுடன் கூடிய மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி இந்த இடைத்தரகா்கள் தோ்வு செய்யப்பட்டதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது. ஸ்ரீநிவாஸ் இஞ்செட்டி தலைமையிலான ஐபிஓ குழு நியமனத்துக்கான ஒப்புதலை வழங்கியது.
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான என்எஸ்இ, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த ஐபிஓ முற்றிலும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ முறையில் அமைய உள்ளது. அதாவது, என்எஸ்இ-வில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவா்கள் தங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வா். புதிய பங்குகள் எதுவும் சந்தையில் வெளியிடப்படாது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த இந்த ஐபிஓ-வுக்கு, இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) கடந்த ஜனவரி இறுதியில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்ட வணிக வங்கியாளா்கள் பட்டியலில் மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேபிடல் மற்றும் சா்வதேச நிறுவனங்களான மோா்கன் ஸ்டான்லி, ஜே.பி.மாா்கன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சிரில் அமா்சந்த் மங்கள்தாஸ், கைதான் & கோ போன்ற முன்னணி சட்ட நிறுவனங்களும் இந்த ஐபிஓ பணிகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ளன.