பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
சென்செக்ஸ் 639.42 புள்ளிகள் உயர்ந்து 77,303.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 194.75 புள்ளிகள் உயர்ந்து 24,092.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சன் பார்மா நிறுவனப் பங்குகளின் எழுச்சியை தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 1 சதவீதம் மீண்டன. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களாக நீடித்து வந்த சரிவு முடிவுக்கு வந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 755.83 புள்ளிகள் வரை உயர்ந்து 77,420.04 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 639.42 புள்ளிகள் உயர்ந்து 77,303.63 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு, 194.75 புள்ளிகள் உயர்ந்து 24,092.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ஆர்கனான் & கோ நிறுவனத்தை, 11.75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில், முழுமையாகப் பணப் பரிமாற்றத்தின் மூலம் கையகப்படுத்துவதாக அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள சன் பார்மா நிறுவனத்தின் பங்கு விலை 7 சதவீதம் உயர்ந்தன. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் இதுவும் ஒன்றாகும்.
Advertisement
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.88 சதவீதம் உயர்ந்தன. அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, எச்.சி.எல் டெக் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஆக்சிஸ் வங்கி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ட்ரெண்ட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
நிஃப்டி குறியீட்டில் சன் பார்மா, டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ மற்றும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்டவை உயர்ந்தும் மறுபுறம் ஶ்ரீராம் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், ஊடகம், நுகர்வோர் பொருட்கள், மருந்துத் துறை மற்றும் மின்சக்தி ஆகிய துறைகளின் குறியீடுகள் தலா சுமார் 2% வரை முன்னேற்றம் கண்டன.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடுகள் உயர்வுடனும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் சாதகமான நிலையில் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தை (வெள்ளிக்கிழமை) அன்று பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் தணியக்கூடும் என்ற செய்தி குறிப்பு, இன்றைய பங்குச் சந்தை வலிமைக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது. அதே வேளையில், சந்தையின் இந்த ஏற்றத்தைத் தக்கவைத்துக் கொள்வதில், பல்வேறு துறைசார் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியப் பங்கு வகித்தது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ. 8,827.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இன்ஜினியர்ஸ் இந்தியா, சிஇஎஸ்சி, எச்எஃப்சிஎல், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், செயில், டாடா பவர், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், அதானி பவர், பிஎச்இஎல், அதானி எனர்ஜி, என்.டி.பி.சி, என்.எம்.டி.சி, கிரானூல்ஸ் இந்தியா, லாயிட்ஸ் மெட்டல்ஸ், நல்கோ, ஹிண்டால்கோ, அதானி கிரீன் எனர்ஜி, நெஸ்லே உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில், 52 வார உச்சச்தை எட்டியது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 2.53 சதவீதம் உயர்ந்து 107.9 அமெரிக்க டாலராக உள்ளது.