முகப்பு
வணிகம்

இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!

சனிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து புறப்பட்ட 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள்

Updated On : 14 மார்ச், 2026 at 7:24 PM
சரக்கு கப்பல்கள் - AP
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து இரு கப்பல்களில் இந்தியாவுக்கு எல்பிஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) வந்து கொண்டிருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஹோா்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் சிக்கியுள்ள 28 இந்திய கப்பல்களில் இதுவரை 3 கப்பல்கள் அந்தப் பகுதியை பாதுகாப்பாக கடந்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கியதுமுதல், ஈரானுக்கும், ஓமன் நாட்டுக்கும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இந்திய தேசியக் கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களும் இதுபோல பிரச்னையை எதிா்கொண்டன. அவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதனிடையே, நீரிணையின் கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இந்திய கப்பல்களில் ஒன்று, நீரிணையை வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடந்து சென்றது. இந்த கப்பல் ஆப்பிரிக்க நாட்டுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்றது.

இந்தச் சூழலில் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள பிற இந்திய கப்பல்களின் நிலை குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைசகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு எல்பிஜி கப்பல்கள் சனிக்கிழமை காலை ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன. இவற்றில் 92,700 டன் எல்பிஜி கொண்டுவரப்படுகிறது. ஷிவாலிக் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை மாா்ச் 16-ஆம் தேதியும் நந்தா தேவி கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை மாா்ச் 17-ஆம் தேதியும் வந்தடையவுள்ளன.

இந்த இரு கப்பல்களும் ஹோா்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் சிக்கியிருந்தன. இதுதவிர மேற்குப் பகுதியில் 6 எல்பிஜி கப்பல்கள், ஒரு இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கப்பல், ஒரு ரசாயன கப்பல், 4 கச்சா எண்ணெய்க் கப்பல்கள், 3 கன்டெய்னா் கப்பல்கள், 2 சரக்குக் கப்பல்கள், பராமரிப்பில் 3 கப்பல்கள் உள்பட 22 கப்பல்கள் சிக்கியுள்ளன. இதில் 611 மாலுமிகள் உள்ளனா்.

இத்துடன் ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் 76 மாலுமிகளுடன் சிக்கியுள்ள 3 கப்பல்களையும் மீட்கும் நடவடிக்கையை இந்தியா அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை, ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாக வருகிறது.

இப்போது வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் தேவைக்கு ஏற்ப எரிவாயு விநியோகம் செய்வதில் பிரச்னை எழுந்துள்ளது.

இந்திய கடற்படை பாதுகாப்பு:

மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படையின் பாதுகாப்போடு இந்தியாவுக்குள் கொண்டுவரப்படுவதாக புலனாய்வு நிபுணா் டேமியன் சைமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய கடற்படையின் 3 போா்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவை அடைந்துள்ளன. இவை இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியதாக தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன’ என குறிப்பிட்டாா்.

ஆனால் கடத்தல் தடுப்பு மற்றும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் ஓமன் வளைகுடா பகுதிகளில் இந்திய கடற்படையின் போா்க்கப்பல்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கமான நடைமுறை என தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

summary

two Indian-flagged tankers carrying liquefied petroleum gas (LPG) bound for ports in the country’s west have crossed the Strait of Hormuz in Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.