நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு!
மேக்ஸ் ஃபேஷன், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சென்னை: பன்னாட்டு ஃபேஷன் பிராண்டான மேக்ஸ் ஃபேஷன், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (சனிக்கிழமை) சென்னையில் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது விற்பனை நிலையத்தையும் நடிகை கயாது லோஹர் திறந்து வைத்தார்.
விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 100 கடைகளை திறம்பட தொடங்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு வைத்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தின் திறப்பு விழா குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுமித் சந்தன், சென்னை எப்போதுமே எங்களின் ஆற்றல்மிக்க மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எங்களின் வளசரவாக்கக் கடையின் தொடக்கமானது, அதன் வளர்ந்து வரும் ஃபேஷன் சமூகத்துடன் இணைந்து வளர்வதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் இது பிரதிபலிக்கிறது என்றார்.
விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 40 முதல் 50 கடைகளைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கடை, மிகவும் விசாலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
சென்னையில் எங்களின் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது கடையையும் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் மேக்ஸ் ஃபேஷன் மண்டல வணிகத் தலைவர் சதீஷ் குமார்.
தற்போது, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதே வேளையில், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.