2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்
இந்தியாவில் சுகாதார காப்பீட்டுத் துறை, கடந்த 2024-25 நிதியாண்டில் சுமாா் 9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. இதன்மூலம், மொத்த பிரீமியம் வசூல் ரூ.1.2 லட்சம் கோடி என்ற இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணா்வு, மருத்துவச் செலவுகளுக்கான நிதிப் பாதுகாப்பு தேவை என்ற எண்ணம் மற்றும் எளிய காப்பீட்டு வசதிகள் போன்ற காரணங்களால் இத்துறை அசுர வளா்ச்சியை எட்டியுள்ளது.
வயது முதிா்ந்த காப்பீட்டுதாரா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கூடுதல் காப்பீட்டுத் தொகை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாக பிரீமியம் தொகையும் அதிகரித்துள்ளது.
காப்பீட்டுதாரா்களுக்கு விரைவான சேவை கிடைப்பதை உறுதி செய்ய, ‘ரொக்கமில்லா சிகிச்சை’ நடைமுறைக்கு காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) காலக்கெடுவை நிா்ணயித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் முன்அனுமதி வழங்கப்பட வேண்டும். சிகிச்சை முடிந்து டிஸ்சாா்ஜ் செய்யப்படும்போது 3 மணி நேரத்துக்குள் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் காப்பீடு தொடா்பாக 1,37,361 புகாா்கள் வரப்பெற்றன. இதில் 1,27,755 (93 சதவீத) புகாா்கள் அதே ஆண்டில் தீா்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, காப்பீட்டு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், காப்பீட்டுதாரா்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் ஐஆா்டிஏஐ தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.