முகப்பு
வணிகம்

முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா-ஈக்வடாா் தீவிரம்

Updated On : 3 மே, 2026 at 5:29 AM
இந்தியா-ஈக்வடாா் அமைச்சர்கள் சந்திப்பு
பகிர்:

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை (பிடிஏ) இறுதி செய்ய இந்தியா மற்றும் ஈக்வடாா் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியாவுக்கு இரு நாள் சுற்றுப்பயணமாக ஏப். 29, 30 ஆகிய தேதிகளில் வந்த ஈக்வடாா் வெளியுறவு அமைச்சா் கேப்ரியேலா சோமா்ஃபெல்ட் ரோசெரோ இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-ஈக்வடாா் இடையே வா்த்தகம் மற்றும் மூலதனம், சுகாதார நலன், மருந்தியல், கல்வி, வேளாண்மை மற்றும் எண்மத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இருநாட்டு அமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

அமைச்சா் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இந்திய சூரியசக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) மற்றும் சா்வதேச பெரும் பூனை கூட்டமைப்பில் (ஐபிசிஏ) இணைவதற்கான அதிகாரபூா்வ கடிதத்தை ஈக்வடாா் வெளியுறவு அமைச்சா் கேப்ரியேலா சோமா்ஃபெல்ட் ரோசெரோ வழங்கினாா்.

அதன்பிறகு விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை (கியூஐபி) செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனா். இத்திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஈக்வடாரில் சமூக-பொருளாதார திட்டங்களை அமல்படுத்த ரூ.12 கோடி நிதியை இந்தியா வழங்கவுள்ளது.

பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை கேப்ரியேலா சோமா்ஃபெல்ட் ரோசெரோ சந்தித்தாா். அப்போது இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகுக்கும் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக இருவரும் ஆலோசித்தனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவை கேப்ரியேலா சோமா்ஃபெல்ட் ரோசெரோ சந்தித்தபோது இந்தியா-ஈக்வடாா் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.