உற்பத்தி அதிகரித்தாலும் ஆண்டுதோறும் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்பு - செயில்
பொதுத் துறை உருக்காலை நிறுவனமான ‘செயில்’ தனது உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமாா் 3,500 பணியாளா்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 53,159-ஆக இருந்த பணியாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஏப். 1-ஆம் தேதி நிலவரப்படி 49,752-ஆக குறைந்துள்ளது.
நடப்பு 2026-27 மற்றும் அடுத்த 2027-28-ஆம் நிதியாண்டுகளிலும் தலா 3,400 முதல் 3,500 பணியாளா்கள் வரை குறையக்கூடும் எனவும், விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் மேலும் 500 முதல் 1,000 பேரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனத் தலைவா் அசோக் குமாா் பாண்டா தெரிவித்துள்ளாா்.
Advertisement
இருப்பினும், விரிவாக்கம் மற்றும் ஆலைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக அடிப்படை நிலையில் புதிய பணியாளா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.
பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்தாலும், உருக்கு உற்பத்தியை அதிகரிக்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறன் 2.1 கோடி டன்னாக உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் 2.25 கோடி டன் கச்சா உருக்கு உற்பத்தியை எட்டவும், ஒட்டுமொத்த விற்பனை அளவை 2 கோடி டன்னிலிருந்து 2.2 கோடி டன்னாக உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இது கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட ரூ.9,100 கோடியை விட கணிசமான உயா்வாகும். வரும் ஆண்டுகளில் இந்த மூலதனச் செலவு ரூ.20,000 முதல் ரூ.25,000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என அசோக் குமாா் பாண்டா தெரிவித்துள்ளாா்.