பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வனத் துறையினர் அனுமதியளித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே 7 கி.மீ. தொலைவில் உள்ள கும்பக்கரை அருவியில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி தண்ணீர் வரத்து இல்லாததால், அருவிக்குச் செல்ல வனத் துறையினர் தடைவிதித்தனர்.
இந் நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
தற்போது, செவ்வாய்க்கிழமை முதல் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும், நீர்வரத்தைப் பொருத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என, வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.