பொதுஇடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அரசு காப்பகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அரசு காப்பகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான உணவு, தங்குமிடம் இல்லை. எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி கரோனா நோய்த் தொற்றை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரபாகரன் இதுதொடர்பாக நாளிதழில் வந்த செய்தியும் சுட்டிக்காட்டி ,பழனி மலையைச் சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தார்.
Advertisement
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்த பகுதியில் உள்ள மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பான அறிக்கையை வரும் ஆக. 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.