ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
மிகவும் எளிதான பதில்தான். தாவரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு என்று கண்டுபிடித்தார். ஆனால் எல்லா எளிதான பதில்களையும்போல்,
மிகவும் எளிதான பதில்தான். தாவரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு என்று கண்டுபிடித்தார். ஆனால் எல்லா எளிதான பதில்களையும்போல், இது முழுமையான சரியான பதில் அல்ல. ஜகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்தது இப்படித்தான் அறிந்துகொள்ளப்பட்டது அப்போது. அவரை எதிர்த்தவர்கள், இது சரியான ஆதாரமில்லாத கிழகத்திய கற்பனை என்று சொல்லி எதிர்த்தார்கள். ஆதரித்தவர்களோ, செடிகளும் மனிதர்களைப்போல் உணர்ச்சிகள் கொண்டவை என்பதை கண்டுபிடித்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
ஆனால், உண்மையில் போஸ் கண்டடைந்த விஷயம் வேறுவிதமானது. உயிரியலையும் இயற்பியலையும் இணைப்பது. உயிரற்ற பொருள்கள் அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படும்போது அவற்றின் செயல்திறமை குறைகிறது. பின்னர் அவற்றை ஓய்வு எடுக்க விட்டுவிட்டு பயன்படுத்தும்போது அவற்றின் செயல்திறமை மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. போஸ் இதிலிருந்து ஓர் அடிப்படை உண்மையைக் கண்டடைந்தார். உயிருள்ள பொருள்கள் – உயிரற்ற பொருள்கள் எனும் பாகுபாட்டு எல்லைகளைத் தாண்டி, அவற்றின் சில இயக்கங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
உயிரற்ற பொருள்கள் - உயிருள்ள பொருள்கள் என்கிற பாகுபாட்டிலேயே இரண்டையும் இணைக்கும் பாலங்கள் இருந்தால், தாவரங்கள்…?
இங்குதான் தத்துவத்தின் தாக்கத்தையும் தடையையும் நாம் உணர வேண்டும். மேற்கத்திய அறிவியல், அரிஸ்டாட்டிலை தத்துவத் தந்தையாகக் கொண்டது. அரிஸ்டாட்டில்தான் முதல்முறையாக உயிரினங்களைப் பாகுபடுத்தியவர். அவற்றை சிறு விலங்குகளில் தொடங்கி, இறுதியில் மனிதன் வரையாக ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தியவர். தாவரங்கள் இவற்றில் எங்கு வரும்? விலங்குகள்போல் அவற்றுக்கு உணர்தலும், இடம்பெயரும் தன்மையும் இல்லை. எனவே, அவை உயிரற்றவை என்றார் அரிஸ்டாட்டில். உயிருள்ளவற்றுக்கும் உயிரற்றவற்றுக்கும் நடுவில் எங்கோ தாவரங்கள் வரும் என்றார் அரிஸ்டாட்டில்.
இங்கு தொல்காப்பியர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ’ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே... புல்லும் மரனும் ஓர் அறிவினவே’ என தெள்ளத் தெளிவாக, ‘அறிதலின்’ அடிப்படையில் தாவரங்களை உயிர் உள்ளவை என வகைப்படுத்திவிடுகிறார். ஓர் அறிவு என்பதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே தத்துவத் தரிசனங்களைப் புறஉலகுக்கான சட்டகமாக எடுத்துக்கொள்ளும்போது one to one mapping உதவாது.
ஆனால், அரிஸ்டாட்டிலின் இந்த வகைப்படுத்துதல் ஐரோப்பிய பொதுமனத்தில் ஆழமாக இடம் பிடித்துவிட்டது. என்னதான் தாவரங்களை வகைப்படுத்துதலும், தாவர உயிரணுக்களை நுண்ணோக்கியில் ஆராய்ச்சிகள் செய்தபோதிலும், அவற்றை உயிர்களாக அதுவும் அறிவுடைய உயிர்களாக ஏற்க ஐரோப்பிய மனது இடம் கொடுக்கவில்லை.
1880-ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிலாந்தில் ஒரு புத்தகம் வெளியானது. ஏற்கெனவே பிரபலம் அடைந்திருந்த உயிரியலாளரான சார்லஸ் டார்வின், தனது மகனும் தாவரவியலாளருமான பிரான்ஸிஸ் டார்வினுடன் இணைந்து எழுதிய நூல் அது. 1500 பிரதிகள் விற்றுப்போன அந்த நூல், தாவரங்களின் அசைவுகள், நகர்தல்கள் ஆகியவற்றை ஆராய்ந்தது. இந்த நூலில், டார்வின் ஒரு முக்கியமான அவதானிப்பைச் செய்திருந்தார். ‘‘தாவரங்களின் வேர் நுனிகள் ஒரு மீச்சிறிய விலங்கின் மூளையை ஒத்து செயல்படுவதாகக் கருதினால், அதை மிகைப்படுத்துதல் எனக் கூறமுடியாது” என அவர் சொல்லியிருந்தார். கேம்ப்ரிட்ஜில் போஸ் படித்தபோது, அவரது பேராசிரியர்களில் ஒருவர் பிரான்ஸிஸ் டார்வின்.
டார்வினுக்கு ஓர் எண்ணம் இருந்தது – தாவரங்களுக்கும் அறிதலுக்கான ஓர் அமைப்பு இருக்க வேண்டும். அதற்கும் விலங்குகளின் நரம்பு மண்டலத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். எல்லா விலங்குகளின் நரம்பு மண்டலங்களிலும் ஒற்றுமையான விஷயம் என்ன? நரம்புகளின் ஊடாக பயணிக்கும் மின்னழுத்த சமிக்ஞைகள். இவை தாவரங்களிலும் இருக்கலாம் அல்லவா? அன்றைய காலகட்டத்தில் விலங்குகளின் உடல் இயக்கத்தில் உள்ள மின்னோட்டங்கள் குறித்த ஆராய்ச்சி பரபரப்பாக இருந்தது. அதில், பிரிட்டனில் முன்னணியில் இருந்தவர் பர்டோன்-சாண்டர்சன் என்கிற உயிரியலாளர். இவருக்கு, டார்வின் கடிதம் எழுதி ஒரு தாவரத்தின் செயல்பாடுகளில் மின்னழுத்த சமிக்ஞைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆராயக் கேட்டுக்கொண்டார். அந்தத் தாவரம், வீனஸ் ஃபிளைட்ராப் (Venus Flytrap) என்கிற பூச்சிகளைத் தின்னும் அசைவ தாவரம்.
ஆம், அந்தத் தாவரத்தில் மின்னழுத்த செயல்பாடுகள் இருந்தன. அவை, அவற்றின் உடலில் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்குக் கடந்து சென்றன. இந்த மின்சமிக்ஞைகளின் விளைவாக, ஒரு பூச்சி அல்லது புழு வீனஸ் ஃபிளைட்ராப்பில் இலைகளின் அருகே வரும்போது மேல் இலை 0.1 விநாடியில் மூடிவிடும். அபாரமான வேகம். ஆனால், இந்தத் தாவரத்தில் இருக்கும் மின்சார செயல்பாடு, எல்லா தாவரங்களிலும் இருக்க முடியாத ஒரு சிறப்பான தனித்தன்மை என பர்டோன்-சாண்டர்சன் கருதினார். அவர் பரிசோதனைகள் செய்த பல தாவரங்களில் மின்சார செயல்பாடுகளை அவரால் கண்டடைய முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், இங்கிலாந்து ராயல் சொசைட்டி எனும் அறிவியல் கழகத்தில் இயற்பியலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள் முன்னால், தாவரங்கள் புறச்சூழல் தாக்கங்களுக்கு மின்னழுத்த எதிர்வினைகளை (responses) கொண்டிருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறினார். அதை அவர் கூறியபோது, இதை பர்டோன்-சாண்டர்சன் கடுமையாக எதிர்த்தார். போஸ் கண்டறிந்த இந்த மின்னழுத்த செயல்பாடுகளை எதிர்வினைகள் எனக் கூறக்கூடாது என்றார். போஸ் இந்த மின்னழுத்த செயல்பாடுகளைக் கண்டறிந்தது, ‘தொட்டால் சுருங்கி’ செடியில்.
இதிலிருந்து, போஸ் வந்தடைந்த கருத்து அபாரமானது: “எந்த இடத்தில் பௌதீகச் செயல்பாடு நிற்கிறது; எங்கே உயிரியக்கச் செயல்பாடு தொடங்குகிறது என ஒரு தெளிவான வரையறையை நாம் வகுக்க முடியாது. ஒவ்வொரு தாவரத்திலும், தாவரத்தின் ஒவ்வொரு பாகமும் புறச்சூழலுக்கு மின் எதிர்வினை ஆற்றும் தன்மை கொண்டவை.”
தன்னால் கண்டறியமுடியாத ஒன்றை போஸ் கண்டடைந்தார் என்பதில் ஏற்பட்ட ஆத்திரமா அல்லது உண்மையிலேயே அவரால் போஸின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா என்பது தெரியாது. மற்றொரு பிரபல உயிரியலாளரான அகஸ்டஸ் வாலரும் போஸின் எதிர்ப்பு அணியில் இருந்தார். பர்டோன்-சாண்டர்சனின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பொதுவாக உயிரியலாளர்கள், போஸை தங்கள் அறிவியல் துறைக்குள் நுழைந்துவிட்ட ஓர் அயலாளாகக் கண்டார்கள். இயற்பியல் ஆசாமி எப்படி உயிரியல் துறையில் வரலாம்?
இந்தச் சர்ச்சை, போஸின் பழைய பேராசிரியர்களில் ஒருவரான சிட்னி ஹோவர்ட் வைன்ஸ் என்பவரை ஈர்த்தது. டார்வினின் சகாவான தாமஸ் ஹக்ஸ்லியைத் தொடர்ந்து, அவரது இடத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பணியாற்றிவந்த T.K.ஹோவஸ் என்பவரை அழைத்துக்கொண்டு அவர் போஸை வந்து பார்த்தார். போஸ் தமது பரிசோதனைகளை ஹோவஸுக்கும் வைன்ஸுக்கும் முன்னால் செய்து காட்டினார். “இந்த அரிய பரிசோதனையையும் அதன் முடிவுகளையும் பார்க்க தாமஸ் ஹக்ஸ்லி தன் வாழ்நாட்களையே அளித்திருப்பார்” என ஆச்சரியத்துடன் கூறினார் ஹோவஸ். வைன்ஸும் ஹோவஸும் லின்னயஸ் கழகம் எனும் அமைப்பில் முக்கியஸ்தர்கள். ராயல் சொஸைட்டி போலவே மதிப்பும் மரியாதையும் கொண்டது லின்னயஸ் கழகம். அங்கே போஸின் ஆராய்ச்சியை வெளியிடுவது என முடிவாயிற்று.
ஆனால், அதற்கிடையில் போஸின் ஆராய்ச்சியை ஒத்த ஒரு ஆராய்ச்சித்தாள், ஒரு அறிவியல் சஞ்சிகையில் வெளியாயிருந்தது. ராயல் சொசைட்டியில் போஸ் தனது பரிசோதனைகளை காட்டிய பிறகு இந்த ஆராய்ச்சித்தாள் வெளியிடப்பட்டிருந்தது. இதை வெளியிட்டவர் போஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதே அகஸ்டஸ் வாலர். போஸ், இது விசாரணை செய்யப்பட வேண்டுமென தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் குழு, போஸின் ஆராய்ச்சியே காலத்தினால் முந்தியது எனத் தெரிவித்தது.
1903 பிப்ரவரி 21 அன்று, லின்னயஸ் கழகத்தில் போஸ் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். மின்-எதிர்வினைகள் எனும் வார்த்தை எடுக்கப்படாமலே அந்த ஆராய்ச்சித்தாள் சமர்ப்பிக்கப்பட்டது. இது சாதாரணமான சாதனை அல்ல. அறிவியலாளர்களுக்கும் கட்டுப்பெட்டித்தனமும் முன்முடிவுகளும் உண்டு. அதிலும் அன்று காலனிய காலகட்டம். இத்தகைய சூழலில், போஸின் இந்த வெற்றி மகத்தானது. ஆனால் எதிர்ப்புகள் தொடர்ந்தன.
அன்று உயிர் என்றால் என்ன என்பது குறித்து மேற்கத்திய நாடுகளில் இருவிதமான பார்வைகள்தான் இருந்தன. உயிர் என்பது பௌதீகப் பொருள்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒருவித ஆவித்தன்மை கொண்டது என்பது ஒன்று. இரண்டு, உயிர் என்பது முழுக்க முழுக்க பௌதீகக் கூட்டுக்கலவையால் ஏற்படும் ஒரு விளைவு. போஸ் இந்த இரட்டை நிலையைக் கடந்த ஒரு பார்வையை முன்வைத்தார். போஸின் இந்தப் பார்வையில் உயிர் என்பது ஓர் இயக்க இழை (process). உலகில் நாம் காணும் பல்வேறு வேறுபட்ட உயிரினங்களை இணைக்கும் ஒரு பொதுவான இயக்க இழை. மேற்கத்திய உலகில் இதற்குச் சற்று இணையாக தன்னுணர்வை இவ்வாறு காணும் ஆல்பர்ட் நார்த் வொயிட்கெட்டின் தத்துவ நிலைபாட்டைக் கூறலாம். அதேசமயம், வேதாந்த பௌத்த மரபுகளில் மிகவும் வேர் கொண்ட ஒரு தத்துவ பார்வைதான் இது. உயிரை பிரக்ஞை அறிதல் ஆகியவற்றுடன் இணைத்து, அதையே உயிரின் அடிப்படை பொதுத்தன்மையாக முன்வைக்கும் பார்வை போஸுடையது. இவ்விதத்தில், தாவரங்கள் எந்த உயிரினத்தையும்விட தன்னுணர்வில் ‘சளைத்தவை’ அல்ல.
‘தொட்டால் சுருங்கி’ செடிகளுடனான பரிசோதனை ஒன்றில் மிக மெல்லிய மின்னோட்டங்களை உணரும் தன்மையை அவர் சோதிக்கிறார். தனது சொந்த நாக்கில் அதே மிக மெல்லிய மின்னோட்டம் உணரப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பின்னர் கூறுகிறார்: ‘தொட்டால் சுருங்கி’ செடிக்கு மிக மெல்லிய மின்னோட்டங்களை உணர்ந்து எதிர்வினையாற்றும் ஆற்றல் மானுடனுக்கு இருக்கும் உணர்ச்சித்தன்மையைக் காட்டிலும் அதிகமானது.”
ஆக, பிரிட்டனில் போஸ் சந்தித்த எதிர்ப்பு, தத்துவார்த்த ரீதியில் அரிஸ்டாட்டிலுக்கும் தொல்காப்பியருக்கும் இருந்த முரண். காலனியச் சூழல் அதில் மற்றொரு அதிகக் காரணி. நூறாண்டுகளுக்கும் மேல் கடந்த பின், இன்றைக்கு நவீன ஆராய்ச்சிகள், போஸின் முடிவுகளை ஆமோதிக்கின்றன.