முகப்பு
டமால்… டுமீல்

பகுதி-17 டமால்...டுமீல்...

கரப்பான் பூச்சிக்கு பயந்து புதிய மாளிகை கட்டும் துருக்கி அதிபர்.புதிய இல்லத்துக்கு மாறும்போது கரப்புகள் முன் நின்று அவரை வரவேற்கலாம்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

கரப்பான் பூச்சிக்கு பயந்து புதிய மாளிகை கட்டும் துருக்கி அதிபர்.

புதிய இல்லத்துக்கு மாறும்போது கரப்புகள் முன் நின்று அவரை வரவேற்கலாம்.

***

தேங்காய் நார் மூலம் சாலைகளை அமைத்திடலாமாம்.

மழை பெய்தால் சாலை நாறிடாதா?

***

டாக்டரை பளாரென்று அறைந்த பாடகர் மீகா சிங் கைது.

பளார் பளாரென்று அறைகள் விடப்படும் மோசமான சீரியலை 1008 தடவை தொடர்ந்து பார்க்கும்படி தண்டிக்கலாம்.

***

த்ரிஷா தமிழ்ப் பெண் இல்லையாம். கேரளக்காரியாம்.

‘விரைவில் திருமண-முண்டு’ என்று சிலேடையுடன் சொன்னாரா?


***
ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் லைசென்ஸ் ரத்தாகுமாம்.

காவல் துறையினர் வைர மோதிரக் கையால் குட்டு வைக்கத் தயாராக இருப்பார்களே!

***

புரோட்டா மாஸ்டருக்கு என்ஜினியரைவிட அதிகமான ரூ 18,000 சம்பளமாம்.

மாவுக்கு கை அழுத்தம் கொடுத்துக் கொடுத்து மன அழுத்தம் வந்துவிடுவதால் இருக்கும்.

***

மெட்ரோ வாட்டர் தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுமாம்.

காலப்போக்கில் அது பழகி, நல்ல தண்ணீரைக் குடித்தால்தான் டாய்லட்டுக்கு ஓட வேண்டி இருக்கும்.

***

வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் - ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.

இதில் கடலைபோடுவதும் உள்ளடக்கமா?

***

டாக்டர்கள் இனி மருந்துச் சீட்டுகளில் பெரிய எழுத்தில் எழுதணுமாம்.

மனைவிக்கு எழுதும் கடிதங்களில் கூடத்தானே?

***

சவுதியில் குத்தாட்டம் போட்டால் தண்டனையாக ஐந்து சவக்குழிகள் தோண்ட வேணுமாம்.

அந்தக் குழிகளில் அடக்கம் செய்ய ஆள்களையும் தேடித் தரவேண்டுமா?

***

சீனாவில் மாணவிகள் உபயோகித்த பழைய மெத்தைகளை வாங்க போட்டி.

இணைப்பாக அவர்கள் கண்ட கனவுகளும் வருமே என்று ஆசைப்படலாம்.

***

ஏர் இந்தியா வழங்கிய விமான உணவில் பல்லி இருந்ததாம்.

சிக்கன நடவடிக்கை காரணமாக பல்லி. இல்லாதிருந்தால் மூஞ்சூராக இருந்திருக்கும்.

***

இளம் பெண்கள் உடன் பணியில் இருப்பது தடுமாற்றத்தைக் கொடுக்கிறது — நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் பேராசிரியர்.

பல வருடங்கள் ஒற்றைக்காலிலே நின்று தவம் செய்த விஸ்வாமித்திரர்களே சறுக்கி விழுந்தபோது பேராசிரியர்கள் எம்மாத்திரம்?


***

19 வயதான செல்ல ஆமையுடன் தினம் வாக்கிங் போகும் ஜப்பானியர்.


ஆகா மெல்ல நட, மெல்ல நட மேனி என்னாகும். முல்லை மலர்ப் பாதம் நோகும் என்று பாடிக் கொண்டு போனால் பொருத்தமாக இருக்கும்.

***

நெஞ்சு வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டாம்.


பிரபலங்களுக்கு கைது செய்யப்பட்ட உடனே திடீரென்று வந்துவிடும்.

***

கையால் இடுப்பைச் சுற்றி தொப்புளைத் தொட்டு கலக்கும் சீனப் பெண்கள்.


சிறிய இஞ்சி இடுப்பழகிகளால்தான் இதைச் செய்ய முடியும் அல்லவா?


***

வீரப்ப மொய்லி எழுதிய ராமாயணம் பற்றிய புத்தகம் அவர் எழுதியதா என்று காங்கிரசாரே சந்தேகிக்கிறார்கள்.

யார் எழுதியது என்ற சர்ச்சையில் ஷேக்ஸ்பியர் லெவலுக்கு உயர்ந்து விட்டதாக மொய்லி மகிழலாம்.


***

எழுத்தாளர் தேவனின் ‘ராஜத்தின் மனோரதம்’ நாவலின் 16 அத்தியாயங்களின் தலைப்புகளில் தெரிந்தது, தெரியாது, தெரிகிறது போன்ற வார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இந்த தகவல் பல தீவிர தேவனின் வாசகர்களுக்கே தெரியுமோ, தெரியாதோ என்று தெரியாது.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.