1981-ல் சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' வெளிவந்த போது அதைப் பாராட்டியோ அல்லது விமரிசித்தோ பேசாத ஆளே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அது ஒரு விவாத அலையை எழுப்பியது. நான் அதை விமரிசித்து ஒரு தனிப்புத்தகமே வெளியிட்டேன். பின்னர் சு.ரா.வின் சிறுகதைகளைப் படித்த போது, நகுலன், அசோகமித்திரன், கு.ப.ரா. போன்றவர்களைப் போல் அவை என்னை ஈர்க்கவில்லை என்பதோடு கூட அவை மிகவும் சராசரியாகவும் தோன்றின.
இப்போது 35 ஆண்டுகள் கழித்து இந்தத் தொடருக்காக சு.ரா.வின் மூன்று நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படித்தபோது எண்பதுகளின் துவக்கத்தில் என்ன தோன்றியதோ அதே கருத்துதான் மீண்டும் வலுப்பட்டது. அவரது புகழ் பெற்ற சிறுகதை ‘பள்ளம்’ மிகவும் சராசரியான ஒரு கதை. சுய இரக்கத்தைத் தவிர அதில் எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை விடுமுறையில் வீட்டுக்கு வரும் இலக்கியவாதி நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியாமல் அப்பாவின் வற்புறுத்தலால் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் ஓர் இளைஞன் அன்றைய தினத்தை விவரிக்கிறான். அதிலும் அந்த முடிவு ஏதோ ஒரு பாலா படம் போல் தான் செயற்கையாக இருந்தது. கடை உதவியாளன் மதுக்குஞ்சுவுக்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது.
‘சின்ன வயசிலே நடந்தது. கிராமத்திலே சொல்லக் கேள்விதான். எங்கம்மா ஒரு சினிமாப் பைத்தியம். ஆத்து மணல்லே உக்காந்து சினிமாப் பாத்துக்கிட்டு இருக்கா. நான் மடியிலே படுத்துக் கெடக்கேன். கீள கெடக்கற கூழாங்கல்லே எடுத்து வாயிலே போட்டுக்கறதும் அவ விரலைப் போட்டு நோண்டி எடுக்கறுதுமா இருந்திருக்கு. ஒரு தவா கண்ணை நோண்டிட்டா தெரியாம, அப்டினு சொல்றாங்க’ என்றான்.
மதுக்குஞ்சு, மிகவும் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்...
‘செலவங்க சொல்றாங்க, அவங்க உடனே செத்துப் போயுட்டாங்கனு. செலவங்க சொல்றாங்க, நான்னுக்கிட்டாங்கனு. அண்ணைக்கே அவங்க கண்ணை நோண்டி எனக்கு வச்சுட்டாங்களாம், ஆஸ்பத்திரியிலே’ என்றான் மதுக்குஞ்சு.
‘உனக்கு ஏதாவது கஷ்டமிருக்கா அதனாலே’ என்று கேட்டேன்.
‘ஒண்ணுமில்லே. ஆனா பார்வை இல்லே. பள்ளம்தான் ரொம்பிச்சு’ என்றான் அவன்.
சுய இரக்கத்தில் ஆரம்பிக்கும் கதை கடைசியில் சினிமாவினால் ஏற்படும் தீமை என்கிற நீதியைச் சொல்லி முடிகிறது.
அவரது மற்றொரு புகழ்பெற்ற கதை, ‘பல்லக்குத் தூக்கிகள்.’ 1973-ல் ஞானரதத்தில் வெளியானது. அதைப் படித்து சிலாகிக்காவிட்டால் அப்போது நீங்கள் ஒரு புத்திஜீவியே கிடையாது. ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே தமிழ் இலக்கியவாதிகளின் மத்தியில் அப்போது ஒரு தீண்டத்தகாதவனாகக் கருதப்பட்டேன். (‘சு.ரா.வையே விமரிசிக்கிறான், இவனுக்கு என்ன இலக்கியம் தெரியும்?’)
இப்போது அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற சிறுகதையைப் பார்ப்போம். (இதுவும் ‘பல்லக்குத் தூக்கிகள்’ வெளிவந்த 1973-ல்தான் வெளிவந்தது.) உலகின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று எனச் சொல்லத்தக்க அந்த முழுக்கதையையுமே நான் இங்கே மேற்கோள் காண்பிக்க விரும்புகிறேன். என்றாலும் இடப்பற்றாக்குறை கருதி அதில் சில பகுதிகள். இதிலும் ‘பள்ளத்’தில் வருவது போன்ற ஓர் இளைஞன் தான். சுய இரக்கமும் ஏழைகளின்பால் பச்சாத்தாபமும் தோன்றக் கூடிய, கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஆபத்துகள் அனைத்துக்கும் சாத்தியம் இருக்கக் கூடிய கதைதான். ஆனால் கதையில் தெரிவது ஒரு அபத்தம். எதார்த்த வாழ்வின் மாபெரும் அபத்தம். ஒவ்வொரு சொல்லிலும் அந்த அபத்தம் நுரை போல் கொப்பளித்துக் கொண்டே இருப்பதை நாம் கதை முழுவதிலும் காண்கிறோம். இவ்வளவுக்கும் சு.ரா. ஓர் இடதுசாரி. பாரம்பரியத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அசோகமித்திரனை அப்படிக் கறாராக வரையறுக்க முடியாது. இருந்தும் அசோகமித்திரன் தான் புனைகதைகளில் அவர் எந்த சித்தாந்தத்தைச் சார்ந்திருந்தவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அதையெல்லாம் மீறிய கலாசிருஷ்டியின் சந்நதம் கொண்டு எழுதுகிறார்.
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்
இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.
‘ஹோல்டான்! ஹோல்டான்’ என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை போலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் ‘ஹோல்டான், ஹோல்டான்’ என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.
கதையின் ஆரம்பம் இது. கதை நமக்குப் பிடிபட்டு விட்டது. ரயிலைப் பிடிக்க ஓடுகிறான் ஒருவன். ரயில் கிளம்பி விட்டது. இவ்வளவுதான் கதை. மேலே பார்ப்போம்.
பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச்
சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ, அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.
வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் தைப்பவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை, குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம், குழந்தைகள்.
அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள், இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல முடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடைபாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும்.
ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம்
வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன்? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், ‘எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிட்டான்.
இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து
மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை
எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது
கொடுப்பார்களா? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக்
குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ? அப்பா அம்மா
இருந்து இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில்
ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.
ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.
இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர
ஆரம்பித்துவிட்டது.
ஓடினான்.
அப்புறம் பிளாட்பாரத்தில் இருக்கும் பிரச்சினைகள். உலகில் உள்ள அத்தனை பொருட்களும் பிளாட்பாரத்தில் கிடக்கின்றன. கடைசியில் ரயிலைப் பிடிக்கப் போகும் போது கடவுள் வேறு குறுக்கிடுகிறார்.
திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்.
‘தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்.’
‘அந்த ரெயிலையா?’
‘ஆமாம். அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்!’
‘வேலை கிடைத்துவிடுமா?’
‘வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!’
‘நீ என்ன ஜாதி!’
‘நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை. பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின்
இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது.
தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!’
‘நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?’
‘போ, தள்ளி! பெரிய கடவுள்.’
மீண்டும் ஒற்றைச் சிறகு, ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன் அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரமில்லை.
இந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து
ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும் இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும்! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று?
இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மீண்டும் கடவுள்.
‘அட ராமச்சந்திரா! மறுபடியுமா?’
‘ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்.’
‘அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும்.’
‘நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?’
‘ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?’
‘அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்.’
‘இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம்’
இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள்,
எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு பட்டிருக்கிறார்கள்! இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்! புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?
இப்படியே இன்னும் விவரிக்கப்படும் கதையின் இறுதிப் பகுதி இது:
கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு
என்ன அடையாளம் கூற முடியும்? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா? மயக்க மருந்து கொடுக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?
அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தது.
***
இந்தத் தொடரின் நோக்கம் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளைப் பற்றி வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல அறிமுகத்தைச் செய்வதுதானே அன்றி வேறு எதுவுமல்ல. அதனால்தான் ஒவ்வொருவரின் படைப்பும் உலகத் தரமானது என்றே குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சு.ரா. இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் மற்ற எழுத்தாளர்களைப் போல் வெறும் கதை மட்டும் எழுதவில்லை. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தமிழ்க் கலாச்சார மதிப்பீடுகளின் சீரழிவு, போலி இலக்கியம், வணிக எழுத்து ஆகிய மூன்றுக்கும் எதிரான ஒற்றைக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தார்.
சுஜாதா தன் பத்திகளில் சுந்தர ராமசாமி பற்றிப் பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சு.ரா. சுஜாதா பற்றி ஓர் இடத்தில் கூடக் குறிப்பிடவில்லை என்பதில் சுஜாதாவுக்கு ஆழமான வருத்தம் உண்டு. அது ஏனென்றால், சு.ரா. எந்த மதிப்பீடுகளுக்காக இயங்கினாரோ அதற்கு எதிரான உலகில் மக்களுக்கு ஒரு கேளிக்கை உலகை சிருஷ்டித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.
பெருமாள் முருகனுக்கு இன்று உலக இலக்கிய அரங்கில் தஸ்லீமா நஸரீனுக்கு இருக்கும் பெயரும் புகழும் இருக்கிறது. மாதொரு பாகனுக்கு ஏற்பட்ட சர்ச்சை காரணம். ஒரு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகை அந்த நாவல் பற்றி என்னை எழுதச் சொன்ன போது அவர்கள் அந்த நாவலுக்கு ஆதரவான அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார்கள். நான் அது ஒரு விஜயகாந்த் படம் என்று எழுதினேன். சமீபத்தில் பெருமாள் முருகனின் மற்றொரு நாவல் ஆங்கிலத்தில் வந்தது. அதிலிருந்து சில பகுதிகளை அதே பத்திரிகை வெளியிட்டது. அந்த நாவல் பற்றி என்னை எழுதச் சொன்னார்கள். இப்படி ஒரு குப்பையை நான் படித்ததே இல்லை என்றும் தஸ்லீமாவின் லஜ்ஜாவும் இதே போன்றதொரு குப்பை தான் என்றும் எழுதினேன். தஸ்லீமா ட்விட்டரில் பொங்கிப் பொங்கி என்னைத் திட்டி எழுதினார்.
இதுதான் சு.ரா.விடமிருந்து நான் கற்றது. நிஜத்தை நிஜம் என்றும் போலியைப் போலி என்றும் சொல்; அதற்காக எந்தச் சமரசமும் வேண்டாம்; கலையில் சமரசத்துக்கே இடமில்லை. ஒருவகையில் என் வாழ்க்கையின் அச்சாணியே சு.ரா. என்று ஆகி விட்டது அல்லவா? சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே?
அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.