முகப்பு
இசை

சௌக்யம் தூக்கல்!

அற்புதமான தேன் சொட்டும் குரல் வளம் தீக்ஷிதா வெங்கட்ராமனுக்கு. இன்றைய வளரும் கலைஞர்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:14 AM
பகிர்:

அற்புதமான தேன் சொட்டும் குரல் வளம் தீக்ஷிதா வெங்கட்ராமனுக்கு. இன்றைய வளரும் கலைஞர்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.

கடந்த டிசம்பர் 27 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் தீக்ஷிதா வெங்கட்ராமனின் மதியம் 12 மணி கச்சேரியை கேட்டபோது திருப்தி ஏற்படவில்லை. அதற்கு காரணம் அன்று அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட ராகங்கள் மற்றும் சாகித்யங்களின் பட்டியலா அல்லது நடுமத்தியான கச்சேரி என்பதால் நமக்கு இயற்கையாகவே ஏற்படும் சலிப்பா என்று தெரியவில்லை.

அதனால் நேற்று மாலை 5 மணிக்கு வேளச்சேரி நாதசுதா அமைப்பின் சார்பில் நடந்த தீக்ஷிதா வெங்கட்ராமனின் நிகழ்ச்சிக்கு நாம் மீண்டும் ஆஜரானோம். ராகவசிம்மன் வயலின், சுமேஷ் நாராயணன் மிருதங்கம்.

Advertisement

ஆபோகி ராகத்தில் குருவருளும் திருவருளும் எனக்கருளும் கணபதியே என்கிற சாகித்யத்துடன் தனது நிகழ்ச்சியை தொடங்கி சுறுசுறுப்பாக ஸ்வரமும் பாடினார். அடுத்தாற்போல் இசைக்க தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் ஹம்சாநந்தி. ஆலாபனையில் இறங்கவில்லை. பாகி ஜெகத் ஜனனி என்பதுதான் சாகித்யம். அதில் சாரத ஹிருதய நிலையே என்கிற இடத்தில் நிரவல் செய்து கல்பனா ஸ்வரமும் பாடினார். இனிமையான குரல் என்பதால் நிரவலிலும் சரி, ஸ்வரப்ரஸ்தாரங்களிலும் சரி, செüக்கியம் தூக்கலாகவே இருந்தது.

தீட்சிதரின் ரேணுகாதேவி சம்ரக்ஷிதோஹம் என்கிற கன்னட பங்கள ராக சாகித்யம் ஒன்றையும், தியாகய்யரின் விறுவிறுப்பான சிம்மவாஹினி ராகத்தில் அமைந்த ஒரு கிருதியையும் பாடிவிட்டு அன்றைய முக்கிய அயிட்டத்துக்கு தயாரானார் தீக்ஷிதா.

கரகரப்ரியாதான் அன்றைய விஸ்தாரமான ஆலாபனைக்கு அவர் எடுத்துக்கொண்ட ராகம். பாபநாசம் சிவனின் செந்தில் ஆண்டவன் சிவக்குமரன் என்கிற பாடலை இசைத்து வேலன், வள்ளி தேவானை லோலன் என்கிற இடத்தில் ஸ்வரம் மட்டும் பாடினார்.

ஆலாபனையில் குறையில்லை. ஸ்வரப்ரஸ்தாரங்களிலும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், கரகரப்ரியா போன்ற ராகங்களில் இனிமையை விட அழுத்தத்துக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தீக்ஷிதாவின் குரலில் கவர்ச்சி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அழுத்தம் போதவில்லையோ என்பது நமது சந்தேகம்.

மத்யமாவதியில் கற்பகமே கண் பாராய் பாடி முடித்தபோது இனிமையான சங்கீதம் கேட்ட நிறைவு இருந்தது. அதேநேரத்தில் எந்த ராகத்தை அழுத்தமாக இசைக்க வேண்டும் என்பதில் தீக்ஷிதா கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம், முன்வரிசை கலைஞராக அடுத்த சில சீசன்களில் வளைய வரும் தகுதி இவருக்கு இருப்பதுதான்.

போன ஜென்மத்தில் இவர் சிவலிங்கத்துக்கு தேன் அபிஷேகம் செய்திருப்பார் போலிருக்கிறது. என்னவொரு இனிமையான குரல்வளம், தீக்ஷிதாவுக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments