அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
தவெக தலைவர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற கட்சியைத் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த தவெக தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுகின்றது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதியில் போட்டியிடுகின்றார். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தவெகவினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அன்று மட்டும் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் நேற்று புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டார்.
மற்ற இடங்களில் பிரசாரம் செய்வதாகத் தேதிகள் முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டநெரிசல் ஏற்படுவதாகவும், காவல்துறை சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்ற காரணங்களால் அவை தள்ளிவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே காணொளி வாயிலாக விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
கட்சி தொடங்கிய நாள்முதல் தவெக தலைவர் விஜய் பொதுவெளியில் எங்கும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததில்லை. கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலியானபோதும் செய்தியாளர்களிடம் பேசாத அவர் சில நாள்கள் கழித்து காணொளி வாயிலாக அந்த விவகாரம் பற்றிப் பேசினார்.
இந்த நிலையில், அரசியலுக்குள் நுழைந்து முதல் முறையாக விஜய் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தன்று அவரது பேட்டி வெளியாக இருப்பதாகவும், ரசிகர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘மக்கள் நாயகன்’ என்ற தலைப்பில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம், விஜய் பொதுவெளியில் பேசத் தயங்குவதாக அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பேட்டி அமையும் என்று ரசிகர்களும் தொண்டர்களும் கூறுகின்றனர்.