முகப்பு
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, மரக்கடை பகுதியில் பொதுத் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அவதி.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:34 AM
பத்தாம் வகுப்பு மாணவர்கள் - DPS
பகிர்:

திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, மரக்கடை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இதில், பெரம்பூா் தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கிய நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப். 2-ஆம் தேதி அவா் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, காவல்துறை அனுமதி அளித்த மரக்கடைப் பகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். ஆனால், அப்பகுதிக்கு அருகே, அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். விஜய் பிரசாரத்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மரக்கடை அருகே சையது முர்தாஸா அரசுப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்.

விஜய் பிரசாரம் நடந்த இடம், இந்தப் பள்ளிக்கு அருகே என்பதால், அவரது பிரசாரத்தால் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒலிப்பெருக்கிகளில் பாடல்கள் ஒலித்ததும், தவெக தொண்டர்களின் விசில் சப்தம் மற்றும் கோஷங்களால் மாணவர்கள் நிம்மதியாக தேர்வெழுத முடியாமல் போனதாகவும், குறிப்பாக விஜய் பிரசாரம் செய்தபோது நிலைமை இன்னமும் மோசமடைந்ததாகவும் மாணவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பள்ளி சார்பில், ஏற்கனவே காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், பொதுத் தேர்வு நடைபெறும் நாள்களில் இங்கே பிரசாரத்துக்கு தடை விதிக்க கேட்டுக் கொள்ளப்பட்டும், காவல்துறை, மரக்கடை அருகே பிரசாரத்துக்கு அனுமதி வழங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்வு முடியும் வரை, பிரசாரக் கூட்டத்தில் சப்தம் அதிகமாக இருந்ததாகவும் பள்ளி நிர்வாகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

சென்னையிலிருந்து திருச்சி..

தவெக தலைவர் விஜய், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை அஞ்சல் நிலையம், மேலப்புதூா் வழியாக பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்துக்கு வந்தாா். இங்குதான், திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான முத்து முருகேச பாண்டியன் அலுவலகம் உள்ளது. காலை 11.25 மணிக்கு வந்து சோ்ந்த விஜய், வாகனத்திலேயே சிறிது நேரம் அமா்ந்திருந்தாா்.

சரியாக நண்பகல் 12.20 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வந்த விஜய், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, அதை தோ்தல் அலுவலா் முன்பாக வாசித்தாா். பிறகு நண்பகல் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மரக்கடைப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

summary

During the campaign of Thaweka leader Vijay, students who were taking the public exam in the Marakkada area were in trouble.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.