திமுக, பாஜக இரண்டுமே ஒன்றுதான்; உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன்: திருச்சியில் விஜய் பேச்சு
திமுக, பாஜக இரண்டுமே ஒன்றுதான், பல வலிகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறேன், உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன் என திருச்சியில் விஜய் பிரசாரம்
திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில், திமுக, பாஜக இரண்டுமே ஒன்றுதான், தவெக வேட்பாளர்கள் வேறு, நான் வேறல்ல, உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, மரக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
சரியாக, பகல் 12.30 மணிக்கு வேட்பு மனுவைத்தாக்கல் செய்துவிட்டு தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், மக்களைப் பார்த்து கேஸ் புக் செய்தால், புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டுக்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்னை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?
மத்திய அரசோ, மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். முதல்வர் ஸ்டாலினைக் கேட்டால் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள். ஆனால், அவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால் புது தில்லிக்குச் செல்வார் என்று விஜய் கூறினார்.
பிறகு, திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை எல்லாம் பட்டியலிட்டு, சொன்னீர்களே, செய்தீர்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனுதாக்கல் செய்தாா். திருச்சி கிழக்குத் தொகுதியில் அவா் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நண்பகல் 12.30 மணிக்கு வேட்புமனு வழங்கினார்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே வந்த விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.