தமிழ்நாடே திவாலாகப் போகிறது! மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிக்கும் திமுக! - விஜய் பேச்சு
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு...
மணல் கொள்ளைக்கு காரணமான மணல் மாஃபியா குழுக்களுக்கு திமுக அரசு ஆதரவளிப்பதாக தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய்,
"விவசாயிகள் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்களின் கஷ்டம் எனக்குத் தெரியும். நம்முடைய ஆட்சியில் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும்.
Advertisement
Advertisement
சமீபத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவால் ஆகப்போகிறது என்று ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காரணம், நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான்.
மணலைக் கொள்ளையடித்தால் என்ன நடக்கும்? மலைகளை முழுங்கினால் என்ன நடக்கும்? கனிம வளங்கள் கொள்ளையடித்தால் பிறகு என்ன நடக்கும்?
மணல் கொள்ளைக்குக் காரணம் மணல் மாஃபியா குழுக்கள். அந்த மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய திமுக அரசுதானே! உங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது,
மழைநீரில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
மாறாக, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடத்தான் தெரியும். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு போராட்டத்தில் உடன் இருந்திருக்கிறீர்களா?
உங்கள் அரசு பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்காக பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தலாமே.. உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? நம் ஆட்சி பொறுப்பேற்றதும் பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்துவோம்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் மீனவர்களுக்காக கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும். மீனவர்கள் மீது யாரும் கை வைக்கக்கூடாது. மீனவர்களுக்காக தவெக ஆட்சி அமையும்.
ஒருவர் அமைதியாக இருந்தால் எதுவும் தெரியாது என்று நினைக்கின்றனர். 2 ஆவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது" என்று பேசினார்.