ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு...
இன்றைய வளரும் கலைஞர்களில் வி.கே.எஸ். மணிமாறன் இந்த சீசனில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்.
இன்றைய வளரும் கலைஞர்களில் வி.கே.எஸ். மணிமாறன் இந்த சீசனில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் சீடர் என்கிற விசிட்டிங் கார்டுடன் களமிறங்கி இருப்பதிலிருந்தே இவரது சங்கீதம் எப்படியிருக்கும் என்பதை நாம் தீர்மானித்து கொள்ளலாம். தொலைக்காட்சி பின்னணியும் இருப்பதால் இசை மேடைகளில் இவர் முன்னணியில் வளைய வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பார்த்தசாரதி சபாவில் இவரது இசை நிகழ்ச்சி. வி.வி.எஸ். முராரி வயலின், பூங்குளம் சுப்பிரமணியம் மிருதங்கம், கே.வி. கோபாலகிருஷ்ணன் கஞ்சிரா.
தனது நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நாட்டை ராகத்தில் ஸ்ரீமகாகணபதே சாகித்யத்துடன் தொடங்கி விறுவிறுப்பாக கல்பனா ஸ்வரமும் பாடிவிட்டு தொடர்ந்து தன்யாசியில் ராம தய ஜூடவே என்கிற சாகித்யத்தையும் பாடி சுத்த சாவேரி ஆலாபனையில் இறங்கினார். பழநி அருமுருகா என்கிற சாகித்யம். கல்பனா ஸ்வரம் பாடினார்.
Advertisement
லலிதா ராக ஆலாபனை. ஹிரண்மயிம் லக்ஷ்மீம் என்கிற சாகித்யம். கல்பனா ஸ்வரமும் பாடினார். அடுத்த உருப்படி ஹுசைனி. எப்படி மனம் துணிந்ததோ என்கிற பாடல். அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு உருப்படி கல்யாணி ராக ஆலாபனை. ஏத்தா உணரா தான் சாகித்யம். கல்பனா ஸ்வரம் தனி என்று விஸ்தாரமாக கல்யாணியை கையாண்டார். பாரதியாரின் சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.
ஆஹா ஓஹோ என்று பாராட்டவும் முடியவில்லை. மோசம் என்று தள்ளவும் முடியாது. இன்னும் ஒன்றிரண்டு சீசன்கள் போனால்தான் இவர் தொடர்ந்து வெற்றிகரமாக வளைய வருவாரா இல்லையா என்பதை நிர்ணயம் செய்ய முடியும். ஒன்று மட்டும் நிச்சயம். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளம் கலைஞர்களில் இவரும் ஒருவர்.