'என்னைக்கும் மகா ராஜாவா இருக்கணும் என்றார் எம்.ஜி.ஆர்'
அவர் வழியே என் வழி - இளையராஜா
சிறுவயதிலிருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள் என்றால் ஆர்வமாக பார்த்து விடுவேன். அவர் பட பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்குமென்பதும் ஒரு காரணம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த காலத்தில் நான் ஒரு இசையமைப்பாளாராக வருவேன் என்றோ, அவராலேயே பாராட்டபடுவேன் என்றோ, அவருடைய கரங்களாலயே பரிசு பெறுவேன்; அருகில் அமர்ந்து அவருடைய அன்பு மொழிகளை அறிவுரைகளை கேட்கும் வாய்ப்பு கிட்டும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.
எங்களுடைய திரையரங்கில் இருபது வருடங்களுக்கு முன்பாக மேடையில் அவரைப் பார்த்தேன்.
Advertisement
இசையமைப்பாளரான பின்பு அவரை அவரது வீட்டில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை பார்த்ததும், 'என்னைக்கும் மகா ராஜாவா இருக்கணும்' என்று ஆசி கூறினார்.
தமிழக அரசு பரிசு கொடுத்த பொழுது அவரைச் சந்தித்தேன். அப்போதும் இதயம் திறந்து பாராட்டினார்.
அவருக்கு அபாரமான இசை ஞானம் இருக்கிறது.
அவருக்கு உள்ள செல்வாக்கு கவர்ச்சியினால் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நிச்சயமாக அது கவர்ச்சி அல்ல. தனியானதொரு பாச உணர்ச்சி! ஆழமான அன்பு!
அதனால்தான் அவரைப் பற்றி தப்பாகப் பேசுபவர்களும், வசைமாரி பொழிபவர்களும் அவரைக் கண்டு விட்டால் சரியாக போய் விடுவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
நடிகர்களில் பலருக்கு இருப்பது கிரேஸ். ஆனால் இவரிடத்தில் மற்றவர்களுக்கும் மக்களுக்கும் இருப்பது பாசம்.
என் மீது அவருக்கு அது போல பாசமும் உண்டு. அதைத்தான் மிகவும் பெருமையாக நான் கருதுகிறேன்.
கலையை பற்றி முழுமையாக அறிந்தவர் , இசையினை பற்றி ஆழமாக அறிந்தவர் என்பதால்தான் 'அலைகள் ஓய்வதில்லை' விழாவில் என்னுடைய முன்னேற்றம் குறித்தும், எனது சகோதரர்களின் வளர்ச்சி பற்றியும் பாசத்தோடு கூறி பாராட்டினார். அப்படிப்பட்ட கலைமேதையின் பாசத்தை பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
பேட்டி: நாகை தருமன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.83 இதழ்)