அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
போருக்கு மத்தியில் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஈரான் குறித்து...
அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் அணி உறுதியாகப் பங்கேற்குமென ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், கடந்த பிப். 28ஆம் தேதி ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் அரசின் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான், அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
இந்த நிலையில், கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற இருக்கின்றன.
குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் அணி நியூசிலாந்து, பெல்ஜியம், எகிப்து ஆகிய அணிகளுடன் முறையே ஜூன் 15, 21, 26ஆம் தேதிகளில் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெற இருக்கின்றன.
இந்த நிலையில், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபாடினோ பேசியிருப்பதாவது:
ஈரான் அணி வருவதில் உறுதியாக இருக்கிறது. விரைவில் சூழ்நிலைகள் அமைதியாகுமென நம்புகிறேன். எப்படியாகினும் ஈரான் நிச்சயமாக வரும். அவர்கள் அந்த நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் அவர்கள் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளார்கள். வீரர்கள் விளையாட வேண்டுமென விரும்புகிறார்கள்.
கடந்த வாரத்துக்கு முன்பாக துருக்கி சென்றிருந்தேன். ஈரான் நல்ல அணியாக இருக்கிறது. விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
நாம் நிலவின் மேல் வசிக்கவில்லை; பூமியில்தான் வசிக்கிறோம். இரு நாட்டிற்கும் இடையே பாலமாக இருக்க யாரும் முயற்சிக்காவிட்டாலும் நாங்கள் அந்த வேலையைச் செய்வோம் என்றார்.