முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்
முத்துராமலிங்கம் படம் குறித்து கௌதம் ராம் கார்த்திக்.....
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் திரைப்படத் தேர்வுகள் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கடல் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார். ஆனால், திருப்புமுனைத் திரைப்படமாக எதுவும் அவருக்கு அமையவில்லை.
அப்படியான சூழலில் 2017 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜதுரை இயக்கத்தில் முத்துராமலிங்கம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்விப்படமாகவே அமைந்தது.
Advertisement
தற்போது, இவர் நடித்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் நாளை (ஏப். 17) வெளியாகவுள்ளது. இதில், இரண்டாம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கௌதம் ராம் கார்த்திக், “முத்துராமலிங்கம் கதைக்காக நான் வருத்தப்படுகிறேன். என் பயணத்தின் மிகப்பெரிய தவறு அது. அறிவின்மையாலும் புரிதலற்ற தன்மையாலும் இப்படம் என் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது. அதன்பின், இந்த மாதிரியான பாணி படங்களை முழுமையாகத் தவிர்த்துவிட்டேன்.
ஒருகட்டத்தில் மீண்டும் முயற்சி செய்யலாம் என அதற்குப் பொருத்தமான இயக்குநர் முத்தைய்யா மூலம் தேவராட்டத்தில் நடித்தேன். அவர் பி, சி சென்டர்களில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இருந்தும், இப்போதும் இப்படியான மாஸ் படங்களில் நடிப்பதில் எனக்கு பயம் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக, கௌதம் ராம் கார்த்திக் நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் நடித்த படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.