கோபாலபுரத்தில் அமைதியான இடத்தில் தோட்டத்தின் நடுவே வசதியான கம்பீரமான பங்களா வாசலில் வண்டி சப்தம் கேட்ட உடனேயே ஒரு பணியாள் ஓடி வருகிறார். என்னை வரவேற்பு அறைக்கு அழைத்து செல்கிறார். வருக! வருக! என வரவேற்றபடியே மாடியில் இருந்து கம்பீரமாகஇறங்கி வருகிறார் நம்பியார்.
பளீரென்று சிவந்த மேனி.முகத்தில் சுறுசுறுப்பு. இனிய தெளிவான பேச்சு. இவைகளின் ஒட்டு மொத்தமாக நம்பியாரைக் காண முடிந்தது.
அவரைப் பார்த்ததும் ஒரு பெரிய ஆச்சர்யம். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தவர் எப்படி இவ்வளவு அடக்கமாக எளிமையாக இருக்கிறார் என வியப்படைய வைத்தது.
நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் பெண்களே நடிக்க வரமாட்டார்கள். ஆண்களே எல்லா வேஷமும் போடுவோம்.நான் நடித்த முதல் படம் 'பக்த ராமதாஸ்' அதில் எனக்கு ஒரு மந்திரி வேஷம். அது ரசிகர்களிடம் எனக்கு நல்ல பெயரை பெற்று விட்டதால், தொடர்ந்து நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. பார்க்க லக்ஷ்ணமாக இருக்க வேண்டும். குரல் இனிமையாக ,உச்சரிப்புகள் சுத்தமாக தெளிவாக இருக்க வேண்டும். நடிகனாவது என்பது அந்தக்காலத்தில் சற்று சிரமமான விஷயம்தான்.
வில்லனாக நீங்கள் நடிப்பில் ஸ்திரமானது எப்போது?
மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த 'திகம்பர சாமியார்' படத்திலிருந்து.
உங்களுடைய இத்தகைய வெற்றிக்கு எது காரண,ம்?
சந்தர்ப்பங்கள்தான். நடித்த படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் என் திறனை மக்கள் அறிய முடிந்தது. ஆனால் ஒன்று இன்றைய நடிகர் நடிகையர்களைப் போல நிறைய சம்பாதிக்க வாய்ப்பில்லை. படம் எடுப்பவர்கள் குறைவாகத்தானே இருந்தார்கள்.
இன்னமும் எடுப்பாகத் தோற்றம் தருகிறீர்களே? எடுப்பாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
சிரித்துக் கொள்கிறார் நம்பியார். நேரப்படி வேலை செய்வது, நேரப்படி சாப்பிடுவது; நேரப்படி உறங்குவது இதுதான். நான் தினசரி தேவையான அளவுக்கு உடல் பயிற்சி செய்கிறேன். எல்லாவற்றையும் நேரப்படி செய்வேன்.. அவ்வளவுதான்.
பேட்டி: குயிலி எஸ்.ராஜேஸ்வரி
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.