நகைச்சுவைக்கு நடுவே நாடுக்காக ஒரு சமுதாயப் பிரச்னையை அலசுவது விசுவுக்குக் கைவந்த கலை.
அந்த வகையில் ‘மோடிமஸ்தான்’ நாடகத்தில் ஒரு சிறிய கருவை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டுகிறார் விசு.
ஆனால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடவில்லை. கணவன், மனைவிக்கிடையே சிண்டு முடிகிறார். அவரேதான் மோடி மஸ்தான். ‘ரேடியோ மாமா’ – பொருத்தமான பெயர்தான் அவரது கேரக்டருக்கு. (சதா சர்வகாலமும் லொட லொடவென்று பேசிக் கொண்டே இருக்கிறார்)
அவ்வளவு பேச்சுக்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறாரே செவிட்டு அப்பா, முத்துகுமார், அதுதான் பெரிய சமாச்சாரம். உண்மையில் அவர் காதில் சங்கு ஊதிப் பார்க்கவேண்டுமென்ற எண்ணமே தோன்றுகிறது!
ஏமாற்றமடைந்த இளைஞனின் கோபத்தை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார் சந்துரு. மனிதர் மகா அழுத்தமானவர் தான். மனைவியாக நடித்த பானுமதி, எப்பேர்ப்பட்ட கஷ்ட காலத்திலும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார்(!) அவரைப் பார்த்துக் கூடச் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லையே!
சாந்தமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி இரண்டு மூர்த்திகளையும் ரங்கா வேறுபடுத்திக் காட்டியது பாராட்டத்தக்கது.
பெண்டாட்டி தாசனுக்கு தக்கவொரு முன் உதாரணம் காட்டுகிறார் கிருஷ்ண மூர்த்தி.
கண்ணை விட்டு அகல மறுக்கும் காட்சி, கீதோபதேசம். பிச்சுமணிக்கு ரேடியோ மாமா உபதேசிப்பது வெறும் ஸ்பாட்லைட்டுக்குக் கீழ்தான் என்றாலும் பின்னணியில் ஒலிக்கும், ‘பரித்ராணாய சாதூனாம்….’ என்ற வரிகள் பார்ப்பவரை குருட்சேத்திரத்திற்கே கொண்டு செல்கின்றன.
-கேயெமெஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.