ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக வெற்றிகரமாக நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் "ஏழாவது மனிதன்" திரைப்படத்தின் இயக்குனரான ஹரிஹரன் திரை உலகத்திற்கு புதியவர் அல்ல.
1977-ல் திரை உலகத்தில் பிரவேசித்த அவர் ஆரம்பத்தில் எடுத்தவை 'எக்ஸ்ப்ரிமெண்ட்' படங்கள். இளைஞர் ஆக்கப் பணிக் குழு சார்பாக அவர் எடுத்த படங்கள் ஸ்பெயினிலும் , எடின்பரோவிலும் நடந்த சர்வதேச பட விழாக்களில் இடம்பெற்று பாரட்டை பெற்றன. தொடர்ந்து மற்றும் சில எக்ஸ்ப்ரிமெண்ட் படங்களை உருவாக்கிய அவர் 'வான்டட் தங்கராஜ்' எனும் குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் குழந்தைகளுக்கான முதல் தமிழ்படமாக அமைந்தது.
அவரோடு ஒரு சந்திப்பு:
ஏழாவது மனிதன் படத்தை ஆர்ட் பிலிமாக எடுக்க விரும்பினீர்களா அல்லது கமர்ஷியல் பிலிமா? என்று கேட்கத் தொடங்கிய பொழுதில் டைரக்டர் ஹரிஹரன் குறுக்கிட்டு சொன்னார்.
இதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம். தேவையான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். பாரதியாரின் புரட்சிக்கருத்துக்களை பிரதிபலிக்கும் படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இதில் கலை அம்சம் இருக்கிறது. ஆனால் இது கமர்ஷியல் படம்தான். வலுவான கருத்துக்களுடன் கூடிய வளமான கதை. பாரதியாரின் பாடல்களுக்கு வைத்தி லட்சுமணனின் இனிமையான இசை. தர்மாவின் அற்புதமான ஒளிப்பதிவு. நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் எல்லா டெக்னீஷியன்களின் முழு ஒத்துழைப்பு..இத்தனையும் வெற்றிகரமாக இணைந்து, கருத்துள்ள கமர்ஷியல் படம் என்ற பெயரைத் தேடித் தந்திருக்கிறது.
முழுக்க முழுக்க காதல், டான்ஸ், செக்ஸ், சண்டைக் காட்சிகள் நிறைந்த மசாலாப் படத்தை இயக்கித் தர சம்மபதிப்பீர்களா?
நிச்சயமாக சம்மதிக்க மாட்டேன். வெறும் காதல், செக்ஸ், பைட்டிங்குக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நான் தேவையில்லை. ஆனால் நல்ல கமர்ட்ஷியல் படங்களை ஒப்புக் கொள்ளத் தயங்க மாட்டேன்.
கமர்ஷியல் படம் என்றால் என்ன? வெறும் செக்ஸையும் செயற்கையான சண்டைகளையும் திணித்து ஆடம்பரமாக படமெடுப்பதுதான் கமர்ஷியல் படம் என்று எண்ணுவது தவறு.அருமையான கதையுடன், அழகான கருத்தோடு, புதுமையான கண்ணோட்டத்தோடு மக்கள் ரசிக்கும்படி, படங்களை தரமாகவும் சிறப்பாகவும் எடுக்க முடியும். அவையும் கமர்ஷியல் படங்கள்தான்..! என்றார் ஹரிஹரன்.
நமது நாட்டிலிருந்து திரைப்படங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று அந்நாட்டு மக்களுக்கு போட்டுக் காட்டுகிறார்கள். அதேபோல் இங்கு ஒரு மாநிலமொழியில் தயாரிக்கப்படும் ஒரு நல்ல படம், பக்கத்துக்கு மாநிலங்களில் கூட காண்பிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏன் அத்தகைய வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொள்ளக் கூடாது ? என்று கேட்கிறார் ஹரிஹரன்.
பேட்டி: ராம்ஜி
(சினிமா எக்ஸ்பிரஸ் ன் 15.09.82 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.