ஜெயலலிதாவைக் கண்டவுடன் ஆவேசமாக அவரை நெருங்கினார்கள்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - ஜெயலலிதா
பல ஆண்டுகளுக்குமுன்பு ஜெயலலிதா திரை உலகில்கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்து, அந்தப் பேட்டி ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது. அதில் அவர், என்னை சிலர் கன்னட நாட்டிலிருந்து வந்தவள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். அது தவறான செய்தி நான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழ்ப்பெண்.தமிழ்தான் என் தாய்மொழி; கன்னடமல்ல" என்று கோரியிருந்தார். அந்த செய்தி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல வார பத்திரிக்கையில் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரிய செய்தியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது
அந்த சமயத்தில் மறைந்த பிரபல டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள் 'கங்கா கவுரி' என்ற படத்தை மைசூர் பிரீமியர் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா, ஜெயந்தி, தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த படப்பிடிப்பை நேரில்
காண்பதற்காக, மைசூருக்கு சென்றிருந்த சில பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன்.
Advertisement
அன்று ஜெயலலலிதாவுக்கு ஒரு 'க்ளோசப்' ஷாட்; முதல் டேக் எடுத்து இரண்டாவது டேக் கூட எடுக்கவில்லை.அப்போது திபு திபு என்று, 'ஆய் ஊய்' என்று ஆவேச கூச்சல் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஐநூறு பேர் கைகளில் தடி,கம்பு , அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் வெறிபிடித்தவர்களைப் போல, 'எங்கே அவள்? 'எங்கே அவள்? சும்மா விடக்கூடாது அவளை! பிடியுங்கள், பிடியுங்கள்!என்று ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.படப்பிடிப்பு நடக்கும் ப்ளோருக்குள் நுழைந்து ஜெயலலிதாவைக் கண்டவுடன், ஆவேசமாக கூச்சலிட்டுக் கொண்டு அவரை நெருங்கினார்கள்.
அப்போது ஜெயலலிதா...
(அடுத்த பகுதியில் தொடரும்)