பகுதி 3 – திருவண்டப் பகுதி 7
நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.
21
பாடலின்பம்
உருகுவது
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன், ஒள்ளிய
கன்னல், கனி தேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன், என்னில்
கருணை வான் தேன் கலக்க
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன், மால் அறியாப் பெற்றியோனே.
பொருளின்பம்
உருகுகின்ற மனத்தை ஓர் உருவமாகச் செய்ததுபோல, எனக்கு உருகும் உடலைக் கொடுத்தான் அவன்,
ஒளி நிறைந்த கரும்பு, கனியைத் தேடிச் செல்லும் ஆண் யானையைப்போல, தகுதியில்லாத கடையனாகிய என்னையும் மகிழ்ச்சியாக வாழச் செய்தான்,
என்னில் கருணையாகிய உயர்ந்த தேன் கலக்குமாறு அருளோடு சேர்ந்த அமுதமாக ஆக்கினான்,
இத்தனையையும் செய்தவன், பிரமன், மால் தேடியும் அறியாத அந்தப் பெருமையுடைய சிவபெருமான்!
சொல்லின்பம்
அள் ஊறு ஆக்கை: பெரிதும் உருகுகின்ற உடல்
ஒள்ளிய: ஒளி நிறைந்த
கன்னல்: கரும்பு
களிறு: ஆண் யானை
கடைமுறை: கடைசியான
வான்: உயர்ந்த
பரா: மேலான
பெற்றியோன்: பெருமைக்குரியவன்