பகுதி 4 – போற்றித் திரு அகவல் 2
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
23
பாடலின்பம்
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியினுள் வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வரு தரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை...
பொருளின்பம்
குறிப்பு: பிறக்குமுன்பே நாம் அனுபவிக்கும் துயரங்களை மாதவாரியாக இந்தப் பாடல் விளக்குகிறது. கொஞ்சம் மருத்துவரீதியிலும் இதனை ஆராய இடம் உண்டு. ஆனால் இதன் மையக் கருத்து, பிறவித் துயரை விளக்குவதும், பின்னர் இறைவன் தாள் சேர்வதன் மேன்மையைச் சொல்வதும்தான்
நான் செய்த வினைகளுக்கேற்ப, யானை தொடங்கி எறும்புவரை அனைத்துப் பிறவிகளும் எடுத்தேன், அவற்றிலிருந்து தப்பினேன், மனிதப் பிறவி எடுத்தேன், என் தாயின் வயிற்றில் கருவாகத் தங்கியிருந்தேன், அப்போது, குறைவில்லாத பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நான் பிழைத்தேன்,
முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவு இருந்த நான், இரண்டாகப் பிளவுபட்டு உருக்குலையாமல் பிழைத்தேன், இரண்டாவது மாதத்தில் ஒருமைப்பாடு நிகழும்போது, அதிலிருந்து தப்பினேன்,
மூன்றாவது மாதத்தில் அன்னை வயிற்றில் கொழுப்பு நீர்ப் பெருக்கு ஏற்பட்டது, அதிலிருந்து தப்பினேன்,
நான்காவது மாதத்தில் பேரிருளில் இருந்து தப்பினேன், ஐந்தாவது மாதத்தில் உயிர் இழக்காமல் தப்பினேன், ஆறாவது மாதத்தில் உடல் உறுப்புகள் கூடக் குறைய இல்லாமல் முறையாக அமைந்து தப்பினேன், ஏழாவது மாதத்தில் தாழ்ந்த இந்த உலகின் துயரங்களில் இருந்து தப்பினேன், எட்டாவது மாதத்தில் வந்த கஷ்டத்திலிருந்து தப்பினேன், ஒன்பதாவது மாதத்தில் வந்த துன்பத்திலிருந்து தப்பினேன்,
பத்தாவது மாதத்தில் பிறந்து, தாயுடன் (பிரசவம்) சிரமம் அனுபவித்து அதிலிருந்து தப்பினேன்,
பிறகு ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்துவந்தேன், அப்போது...
சொல்லின்பம்
ஈறு: நிறைவு
உதரம்: வயிறு
செரு: போர்
மதி: மாதம்
மதம்: கொழுப்பு நீர்
முஞ்சுதல்: இறத்தல்
ஊறு: குறைபாடு
அலர்: மிகுதி
கட்டம்: கஷ்டம்
தசம்: பத்து
சாகரம்: கடல்
அக்காலை: அப்போது