முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 5 – திருச்சதகம்  2

‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

திருச்சதகத்தின் இரண்டாம் பிரிவு, 'அறிவுறுத்தல்'.

இறைவனிடமும் தன் நெஞ்சிடமும் விண்ணப்பிக்கும்விதமாக அமைந்த பத்து பாடல்களைக் கொண்டது.

30

பாடலின்பம்

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நான் நடுவே

வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகச் சீர் மணிக் குன்றே, இடை அறா அன்பு உனக்கு என்

ஊடு அகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே

*

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


பொருளின்பம்

என்னை அடிமையாகக் கொண்டவனே,

உண்மையாக உன்மீது அன்பு கொண்ட அடியவர்கள் பலர் உண்டு. அவர்கள் மத்தியில் நான் வெறுமனே அடியார்போல் நடிக்கிறேன். அதன்மூலம் வீடுபேறு

எனக்குக் கிடைத்துவிடும் என்று எண்ணி ஓடுகிறேன்,

ஆடகப் பொன்னும் ரத்தினங்களும் இணைத்துச் செய்த சிறப்பு மிகுந்த குன்று போன்றவனே, உன்மீது அன்பு எனக்குள் இடைவெளியில்லாமல் பெருகவேண்டும்,

நான் அதை எண்ணி உருகவேண்டும், அதற்கு அருள் செய்.

வான், மண், காற்று, ஒளி அனைத்தும் நீ,

உடல், உயிர் இரண்டும் நீ,

உண்டு என எண்ணுவோருக்கு நீ உண்மை, இல்லை என எண்ணுவோருக்கு நீ இன்மை, இப்படி இரண்டாகவும் நீ திகழ்கிறாய்,

எங்கள் தலைவனாகச் சிறந்து விளங்குகிறாய்,

நான், என்னுடையது என்று கர்வம் கொண்டு நிற்கிறவர்களைக் கூத்தாடச் செய்கிறவனாக நிற்கிறாய்,

உன்னை நான் என்ன சொல்லி வாழ்த்துவேன்!
 

சொல்லின்பம்

ஆடகம்: ஒருவகைத் தங்கம்

ஊடு: வழியாக

உடையான்: அடிமையாக உடையவன்

வளி: காற்று

ஊன்: உடல்

கோன்: தலைவன்

கூத்தாட்டுவான்: ஆடச்செய்கிறவன்

முழு கட்டுரையைப் படிக்க →