பகுதி 5 – திருச்சதகம் 5
‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
திருச்சதகத்தின் ஐந்தாம் பகுதி 'கைம்மாறு கொடுத்தல்'.
இறைவன் தனக்குத் தந்த பேரின்பத்துக்குப் பதிலாகத் தன்னால் அவனுக்கு எதையும் வழங்க இயலவில்லையே என்று ஏங்கிப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
33
பாடலின்பம்
இரு கை யானையை ஒத்திருந்து என் உளக்
கருவை யான் கண்டிலேன், கண்டது எவ்வமே,
வருக என்று பணித்தனை, வானுளோர்க்(கு)
ஒருவனே, கிற்றிலேன், கிற்பன் உண்ணவே!
*
எந்தை, யாய், எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை, தாய், தம்பிரான், தனக்கு அஃது இல்லான்,
முந்தி என் உள் புகுந்தனன், யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே!
பொருளின்பம்
தேவர்களின் தலைவனே, தனித்துவமானவனே,
நான் இங்கே இரண்டு கை கொண்ட ஒரு யானையைப்போல வெறுமனே வாழ்ந்திருந்தேன். அதனால், என் உள்ளத்துள் இருந்த உன்னை நான் உணரவில்லை,
(இன்னொரு விளக்கம்: இரண்டு கை கொண்ட ஒரு யானையைப்போலக் கம்பீரமானவன் நீ, என் உள்ளத்தினுள் நிறைந்திருந்தாய், அதை நான் உணரவில்லை.)
நீ என்னை 'பரமானந்தத்தை அனுபவிக்க வா' என்று அழைத்தாய், ஆனால் நானோ, அதற்குத் தகுதியில்லாதவனாக நிற்கிறேன், வெறுமனே உலக சுகங்களை அனுபவிக்கதான் என்னால் இயலுகிறது, பேரின்பமாகிய உன்னை அனுபவிக்க இயலவில்லை.
சிவபெருமான் எனக்குத் தந்தை, தாய், தலைவன்,
மற்ற எல்லாருக்கும் அவனே தந்தை, தாய், தலைவன்,
ஆனால் அவனுக்குத் தந்தை, தாய், தலைவன் என்று யாரும் இல்லை, எல்லாம் அவனே!
யாரும் சிந்தனையாலும் எட்ட இயலாத அந்தச் செல்வன், முன்பு என்னுள் புகுந்தான், உளத்தில் நிறைந்தான்!
சொல்லின்பம்
எவ்வம்: துன்பம்
ஒருவன்: ஒப்பற்றவன்
கிற்றிலேன்: இயலாதவன்
கிற்பன்: இயலுவது
எந்தை: என் தந்தை
யாய்: தாய்
பிரான்: தலைவன்