முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 16 – திருப்பொன்னூசல் -9

தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய திரு உத்தரகோசமங்கையில் தங்கும்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

113

பாடலின்பம்

தெங்குஉலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை
தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்துஅருளி
எங்கள் பிறப்புஅறுத்திட்டு எம்தரமும் ஆட்கொள்வான்
பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குஉலவு பூண்முலையீர், பொன்னூசல் ஆடாமோ.

பொருளின்பம்

ஆபரணங்கள் திகழ்கிற மார்பகங்களைக் கொண்ட பெண்களே,

தென்னை மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய திரு உத்தரகோசமங்கையில் தங்கும் சோதித் தனிவடிவம் சிவபெருமான், அவன் எங்களைப் போன்ற சாதாரணமானவர்களையும் ஆட்கொள்வதற்காக, எங்கள் பிறப்பை அறுப்பதற்காக எழுந்தருளினான், அவன் உடலில் ஒரு பாகமான உமையம்மையுடன் வந்து அருள் செய்தான், எங்களை அடிமையாக்கிக்கொண்டான், தேன் வழியும் கொன்றை மலர்களைச் சூடிய சடையைக் கொண்ட அந்தப் பெருமானின் குணங்களைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.

சொல்லின்பம்

தெங்கு: தென்னை

எம்தரம்: எங்களைப்போன்றவர்கள்

கோதை: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது

பணிகொண்ட: அடிமைகளாக்கிக்கொண்ட

கொங்கு: தேன்

சடையான்: சடையைக் கொண்டவன்

பொங்கு: சிறப்பு பொங்கித் திகழ்கிற

பூண்: ஆபரணம்

முழு கட்டுரையைப் படிக்க →