முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 17 – அன்னைப் பத்து - 4

என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் வெள்ளை நிற ஆடையை அணிந்தவர்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை  ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.

இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

117

பாடலின்பம்

வெள்ளைக் கலிங்கத்தர், வெண்திரு முண்டத்தர்,

பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்,

பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேற்கொண்டு என்

உள்ளம் கவர்வரால் அன்னே என்னும்.

*

தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,

ஆள்எம்மை ஆள்வரால் அன்னே என்னும்,

ஆள்எம்மை ஆளும் அடிகளார் தம்கையில்

தாளம் இருந்தவாறு அன்னே என்னும்.

பொருளின்பம்

என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் வெள்ளை நிற ஆடையை அணிந்தவர், திருநீறு பூசிய நெற்றியைக் கொண்டவர், துறவிகளைப்போல் உடுத்தியவர், பாய்கின்ற குதிரைமீது ஏறி வந்து என் உள்ளத்தைக் கவர்கிறார்’ என்கிறாள்.

*

என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் தாளிக்கொடி, அறுகம்புல்லைக் கொண்டவர், சந்தனச்சாந்து பூசியவர், எம்மை ஆள்பவர், அவர் கையிலிருக்கும் தாளத்தின் தன்மைதான் எப்படிப்பட்டதோ!’ என்கிறாள்.

சொல்லின்பம்

கலிங்கம்: ஆடை

வெண்திருமுண்டம்: நெற்றியில் பூசிய திருநீறு

பள்ளிக் குப்பாயம்: துறவிகளின் ஆடை

அன்னே: அன்னையே

பாய்பரி: பாய்கின்ற குதிரை

ஆள்வரால்: ஆள்கிறவர்

தாளம்: தாளமிடும் இசைக்கருவி

முழு கட்டுரையைப் படிக்க →