முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 18 – குயில் பத்து - 5

கரும்பொன் போன்ற உடலோடு, நறுமணம் வீசுகிற சோலையில் வாழுகின்ற குயிலே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

ஒரு பெண் சிவபெருமானைத் தன் தலைவனாக எண்ணுகிறாள். அவரைக் காண இயலவில்லையே என்ற ஏக்கத்தால் குயிலிடம் பேசுகிறாள்.  ‘அவர் இங்கே வர வேண்டும். அதற்காக நீ கூவு’ என்கிறாள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

123

பாடலின்பம்

கார்உடைப் பொன்திகழ் மேனி, கடிபொழில் வாழும் குயிலே,

சீர்உடைச் செங்கமலத்தில் திகழ்உருஆகிய செல்வன்,

பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனைஆண்ட

ஆர்உடை அம்பொனின் மேனி அமுதினை நீ வரக் கூவாய்.

*

கொந்துஅணவும் பொழில்சோலைக் கூங்குயிலே, இது கேள் நீ,

அந்தணன்ஆகி வந்துஇங்கே அழகிய சேவடி காட்டி

‘எம்தமராம் இவன்’ என்றுஇங்கு என்னையும் ஆட்கொண்டுஅருளும்

செந்தழல்போல் திருமேனித் தேவர்பிரான் வரக் கூவாய்.

பொருளின்பம்

கரும்பொன் போன்ற உடலோடு, நறுமணம் வீசுகிற சோலையில் வாழுகின்ற குயிலே,

சிறப்புடைய செந்தாமரை மலர்போலத் திகழும் திருமேனியைக் கொண்டவன், மண்ணுக்கு வந்து, தன்னுடைய திருவடிகளைக் காட்டி, என்னுடைய பாசங்களை அறுத்து ஆண்டவன் அந்தச் சிவபெருமான், அத்திமாலை அணிந்த அந்தப் பொன்னார் மேனியன், பக்தர்களுக்கு அமுதம்போன்றவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

*

பூங்கொத்துகள் நிறைந்த சோலையிலே கூவுகின்ற குயிலே, இதைக் கேள்,

அந்தணன் வடிவில் இங்கே வந்து, தன்னுடைய அழகிய திருவடிகளைக் காட்டி, ‘என்னுடைய அடியவர்களில் இவனும் ஒருவன்’ என்று சொல்லி என்னை ஆட்கொண்டு அருளியவன் சிவபெருமான், செந்தழல்போன்ற திருமேனி கொண்ட அந்தப் பெருமான், தேவர்களின் தலைவன் இங்கே வரவேண்டும் என்று நீ கூவு.

சொல்லின்பம்

கார்: கருமை

கடி: நறுமணம்

பொழில்: சோலை

சீர்: சிறப்பு

செங்கமலம்: செந்தாமரை

பார்: பூமி

ஆர்: அத்தி மலர்

அம்பொன்: அழகிய பொன்

கொந்து: பூங்கொத்து

கூங்குயிலே: கூவும் குயிலே

சேவடி: சிவந்த/ சிறந்த திருவடி

எம் தமர்: என்னுடையவர்/ என் அடியவர்

பிரான்: தலைவன்

முழு கட்டுரையைப் படிக்க →