பகுதி 16 – திருப்பொன்னூசல் -3
முடிவும் முதலும் இல்லாமல் என்றும் நிலைத்திருக்கிறவன் சிவபெருமான், பல நூறு கோடி முனிவர்களும் இமையவர்களும் அவனை வணங்க,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
107
பாடலின்பம்
முன் ஈறும், ஆதியும்இல்லான், முனிவர்குழாம்,
பல்நூறு கோடி இமையோர்கள்தாம் நிற்பத்
தன் நீறு எனக்குஅருளித் தன் கருணைவெள்ளத்து
மன்ஊற மன்னுமணி, உத்தரகோசமங்கை
மின்ஏறு மாட வியன்மாளிகை பாடிப்
பொன்ஏறு பூண்முலையீர், பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
பொன் ஆபரணங்களை அணிந்த, அழகிய மார்பகங்களைக் கொண்ட பெண்களே,
முடிவும் முதலும் இல்லாமல் என்றும் நிலைத்திருக்கிறவன் சிவபெருமான், பல நூறு கோடி முனிவர்களும் இமையவர்களும் அவனை வணங்க, அவனோ தன்னுடைய வெண்ணீறை எனக்கு அருளினான், அவனுடைய பெருங்கருணை வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் அழகிய உத்தரகோசமங்கையில், மேகங்கள் தவழும் மாடங்களைக் கொண்ட அவனது பெரிய, சிறப்பான மாளிகையைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
ஈறு: நிறைவு
ஆதி: தொடக்கம்
குழாம்: கூட்டம்
மன்: நிறைய
மன்னு: எழுந்தருளியிருக்கிற
மின்: மேகம்
வியன்: அகன்ற
பூண்: நகை