பகுதி 16 – திருப்பொன்னூசல் -5
பிரம்மன், திருமால் இருவரும் சிவபெருமானைக் காண இயலாமல் திகைத்தார்கள், அவன் ஆணா,
ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
109
பாடலின்பம்
ஆணோ அலியோ அரிவையோ என்றுஇருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டுஅருளி நஞ்சுதனை
ஊணாக உண்டுஅருளும் உத்தரகோசமங்கைக்
கோண்ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூண்ஆர் வனமுலையீர், பொன்னூசல் ஆடாமோ.
பொருளின்பம்
ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பகங்களைக் கொண்ட பெண்களே,
பிரம்மன், திருமால் இருவரும் சிவபெருமானைக் காண இயலாமல் திகைத்தார்கள், அவன் ஆணா, பெண்ணா, அலியா என்பதை உணர இயலாமல் அனைவரும் வியக்கிறார்கள், ஜோதி வடிவமாக, இவை எல்லாமுமாக அவன் திகழும் பண்பைப் போற்றுகிறார்கள்,
அன்று பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது, அதைக் கண்டு தேவர்களின் கூட்டம் நடுங்காதபடி நஞ்சை எடுத்து உண்டவன், அவர்களை ஆட்கொண்டவன் சிவபெருமான், உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் அப்பெருமான் வளைந்த பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய கூத்தன், அவனுடைய குணங்களைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.
சொல்லின்பம்
அரிவை: பெண்
குழாம்: குழு
நாணாமே: பயப்படாமல்
உய்ய: பிழைக்க
ஊண்: உணவு
கோண்: வளைந்த
சென்னி: தலை
பரவி: பாராட்டி
பூண்: ஆபரணங்கள்
வன: அழகிய