பகுதி 10 - திருக்கோத்தும்பி - 5
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது.
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.
69
பாடலின்பம்
கருவாய், உலகினுக்கு அப்புறமாய், இப்புறத்தே
மருஆர் மலர்க்குழல் மாதினொடும் வந்து அருளி,
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ
*
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்,
தானும் தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்!
வானும் திசைகளும் மாகடலும் ஆய பிரான்
தேன்உந்து சேவடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
பொருளின்பம்
உலகங்கள் அனைத்துக்கும் விதை அவன். அந்த உலகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டுத் திகழ்கிறவன்.
அப்படிப்பட்ட சிவபெருமான், மணம் வீசும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய உமையம்மையுடன் இங்கே எழுந்தருளினான், வேதங்களை அருவாகப் பயிலும் அந்தணன் வடிவத்தில் வந்து என்னை ஆட்கொண்டான்,
கோத்தும்பியே, அழகிய அந்தத் தேவனின் திருவடிகளில் நீ ரீங்காரம் செய்வாய்,
தாழ்ந்த சடைமுடியைக் கொண்ட சிவபெருமான் தன் துணைவியான உமையம்மையோடு வந்து என்னை ஆட்கொண்டிருக்காவிட்டால், நான் அவனை எண்ணியிருப்பேனா, என் சிந்தனைதான் அவனைச் சேர்ந்திருக்குமா?
வான், திசைகள், பெரிய கடல் என அனைத்துமாகத் திகழும் தலைவன் அவன்,
கோத்தும்பியே, தேன் சொரியும் அவனது திருவடிகளில் நீ ரீங்காரம் செய்வாய்,
சொல்லின்பம்
கரு: விதை
மரு: வாசனை
குழல்: கூந்தல்
மாது: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது
மறை: வேதம்
திரு: அழகு
சிந்தை: சிந்தனை
தையல்: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது
மா: பெரிய
உந்து: உந்துகிற/ சொரிகிற