பகுதி 10 - திருக்கோத்தும்பி - 6
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.
70
பாடலின்பம்
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப்பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள்ளப்பிரானுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
*
பொய்யாய செல்வத்தே புக்குஅழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயா, என் ஆருயிரே, அம்பலவா என்றுஅவன்தன்
செய்ஆர் மலர்அடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
பொருளின்பம்
மனத்தால் சிந்திக்க இயலாத அழகு உருவம் அவனுடையது, சிந்தித்துப் பார்த்தால், கள்ளமில்லாத இன்பம் அவன், உயர்ந்த கருணை வெள்ளமாகத் திகழ்கிற அந்தப் பிரான், எம்பிரான், சிவபெருமான், அவன் என்னை ஆட்கொண்டான்,
கோத்தும்பியே, அந்தப் பெருமானின் திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
பொய்யான செல்வங்களை உண்மையென்று நம்பி, தினந்தோறும் அவற்றில் புகுந்து அழுந்திக் கிடந்தேன், என்னைச் சிவபெருமான் ஆட்கொண்டு காத்தான்,
கோத்தும்பியே, அத்தகைய இறைவனை, ‘ஐயா, என் ஆருயிரே, அம்பலவா’ என்று புகழ்ந்து பாடி, அவனுடைய செம்மையான திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
சொல்லின்பம்
உள்ளம்: மனம்
உள்ளுதல்: எண்ணுதல்
களி: மகிழ்ச்சி
வான்: உயர்வு
பிரான்: தலைவன்
புக்கு: புகுந்து
அழுந்தி: மூழ்கி
செய்: செம்மையான