முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 6

அத்தகைய சிவபெருமானை நாம் சென்று சேர்வோம், சிறப்பாகத் திகழும் அந்தத் தென்னனின் அழகிய திருவடிகளையே நினைத்திருப்போம்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.

பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

77

பாடலின்பம்

உருகிப் பெருகி உளம்குளிர முகந்துகொண்டு

பருகற்கு இனிய பரங்கருணைத் தடங்கடலை

மருவி, திகழ்தென்னன் வார்கழலே நினைந்துஅடியோம்

திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.

*

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல்உளனாய்க் கிடந்து தடுமாறும்

கவலை கெடுத்து, கழல்இணைகள் தந்துஅருளும்

செயலைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.

பொருளின்பம்

நாம் சிவபெருமானை நினைக்கும்போது, மனம் உருகுகிறது, விரிகிறது, உள்ளம் குளிர்கிறது, அவனுடைய தெய்விகக் கருணை நாம் அள்ளிப் பருகும்படி பெரிய கடலாக விரிந்திருக்கிறது, இனிமை தருகிறது,

அத்தகைய சிவபெருமானை நாம் சென்று சேர்வோம், சிறப்பாகத் திகழும் அந்தத் தென்னனின் அழகிய திருவடிகளையே நினைத்திருப்போம், நம்முடைய செல்வமான அவனுடைய புகழைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

பொய்யான சமயங்கள், பொருந்தாத சாத்திரங்கள் என்கிற மெலிந்த கடலில் நான் கிடந்து தடுமாறினேன், சிவபெருமான் என்னுடைய கவலையைத் தடுத்துத் தன் திருவடிகளைத் தந்து அருளினான், அந்த அருள் செயலைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,

சொல்லின்பம்

முகந்து: எடுத்து

பரம்: தெய்வத்தன்மை

தடம்: பெரிய

மருவி: அடைந்து

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

திரு: செல்வம்

உவலை: பொய்

சாத்திரம்: நூல்

சவலை: மெலிந்த

முழு கட்டுரையைப் படிக்க →